V.A.Durai Demise - அப்பா அப்பா என கூப்பிட்டேன்.. கடைசி நேரத்தில் நடந்தது என்ன?.. வி.ஏ.துரை மகள் உருக்கம்
சென்னை: Producer V.A.Durai Passed Away (பிதாமகன் தயாரிப்பாளர் மரணம்) தயாரிப்பாளர் வி.ஏ.துரை மரணத்தில் கடைசி நேரத்தில் என்ன நடந்தது என்பது தொடர்பாக அவரது மகள் உருக்கமாக பேசியிருக்கிறார்.
சத்யராஜ் நடித்த என்னம்மா கண்ணு படத்தை தயாரித்து தயாரிப்பாளராக அறிமுகமானவர் வி.ஏ.துரை. அதனையடுத்து தொடர்ந்து சிறு பட்ஜெட் படங்கள், பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து சொல்லிக்கொள்ளும்படியான பெயரை பெற்றவர் துரை. தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்த பாபா, விஜயகாந்த் நடித்த கஜேந்திரா படங்களையும் தயாரித்திருக்கிறார்.

பிதாமகன்: தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான படம் பிதாமகன். பாலா இயக்கியிருந்த அந்தத் திரைப்படத்தில் விக்ரம், சூர்யா, லைலா, சங்கீதா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட அந்தப் படத்தை தயாரிப்பதற்கே தனி தைரியம் வேண்டும். அப்படிப்பட்ட சூழலில் அந்த தைரியத்தோடு முன் வந்து தயாரித்தார் வி.ஏ.துரை. படம் தேசிய விருது வென்றது.
நஷ்டம்தான்: படத்துக்காக விக்ரம், பாலாவுக்கு பெரிய பெயர் கிடைத்தது. ஆனாலும் துரையின் நிலைமை சரிய ஆரம்பித்தது. இருந்தாலும் தொடர்ந்து படங்களை தயாரித்தார். அப்படி அவர் விஜயகாந்த்தை வைத்து கஜேந்திரா படத்தை தயாரித்தார். அந்தப் படமும் படுதோல்வியை சந்தித்தது. அதிலிருந்து ரொம்பவே நொடிந்து போனார். இதற்கிடையே பாலாவுக்கு 25 லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாகவும்; கஜேந்திரா படத்தின் சம்பள பாக்கிக்காக துரையின் வீட்டை விஜயகாந்த் எழுதி வாங்கிவிட்டார் என்றும் ஒரு தகவல் உண்டு.
கெஞ்சிய துரை: சூழல் இப்படி இருக்க சில மாதங்களுக்கு முன்பு அவர் அளித்த பேட்டி ஒன்றில், மருத்துவ செலவுக்குக்கூட பணம் இல்லாமல் படுத்த படுக்கையாக இருப்பதாகவும், பிதாமகன் படம் ஏற்படுத்திய நஷ்டத்தை ஈடுகட்ட இன்னொரு படம் இயக்கி தருவதாக கூறி பாலா தன்னிடம் 25 லட்சம் ரூபாய் வாங்கி திருப்பி தரவில்லை எனவும் கூறியிருந்தார். மேலும், அந்தப் பணத்தை மீண்டும் தரும்படி பாலாவிடம் கோரிக்கையும் வைத்திருந்தார் அவர். அதனையடுத்து ரஜினி, சூர்யா, விக்ரம், லாரன்ஸ் உள்ளிட்டோர் அவருக்கு மருத்துவ உதவி செய்தனர்.
மரணம்: சூழல் இப்படி இருக்க அவர் நேற்று இரவு உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெறவிருக்கிறது. திரையுலகினர் அவருக்கு அஞ்சலியையும் இரங்கலையும் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் அவரது மரணத்தில் கடைசி நேரத்தில் என்ன நடந்தது என்பது தொடர்பாக அவரின் மகள் கீர்த்தனா செய்தியாளர்களிடம் பேசுகையில், "அப்பா நன்றாகத்தான் இருந்தார். அவரது கால் எடுக்கப்பட்டிருந்தது. சர்க்கரை நோய் அதிகம் இருந்தது. ஆனாலும் நன்றாகத்தான் இருந்தார். காலுக்குள் சில பிரச்னைகள் இருந்தன. எழுந்து நடக்க முடியாதபடி இருந்தார்.
கடைசி நேரம்: அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. கடைசி மாதம்வரை அவரை மருத்துவமனையில்தான் அட்மிட் செய்திருந்தோம். பிறகு வீட்டுக்கு வந்தோம். நேற்று உடம்பெல்லாம் வலிக்கிறது என்று சொல்லிக்கொண்டிருந்தார். உடனே மருத்துவர்கள் வந்து டெஸ்ட் எல்லாம் எடுத்தார்கள். பிறகு காலை ரிப்போர்ட் வரும் என்றார்கள். சரி அதுவரைக்கும் காத்திருக்க வேண்டாம் என முடிவு எடுத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்ல தயார் ஆனோம். ஆம்புலன்ஸ் எல்லாத்தையும் புக் செய்துகொண்டிருந்தபோது நான் அப்பாவிடம் சென்று, 'அப்பா என்னாச்சு ப்பா அப்பா அப்பா' என்று கேட்டுக்கொண்டே இருந்தேன். அப்போது அவருக்கு கொஞ்சம் இழுக்குற மாதிரி ஆகிவிட்டது. நான் கூப்பிட்டுக்கொண்டே இருந்தேன் அப்போது அவர் இறந்துவிட்டார்" என்றார் உருக்கமாக.


Click it and Unblock the Notifications