பாண்டிய நாடு என் கதை.. திருடிட்டார் சுசீந்திரன் - உதவி இயக்குநர் குற்றச்சாட்டு
சென்னை: பாண்டிய நாடு என் சொந்தக் கதை. அதை திருடி படமெடுத்து என்னை ஏமாற்றிவிட்டார் இயக்குநர் சுசீந்திரன் என்று குற்றம் சாட்டியுள்ளார் உதவி இயக்குநர் புவனராஜன்.
கதைத் திருட்டு குற்றச்சாட்டில் இதுவரை சிக்காமலிருந்த சுசீந்திரன் முதல் முறையாக இப்போது சிக்கியுள்ளார். அதுவும் அவரிடம் உதவியாளராக இருந்தவரே இந்தக் குற்றச்சாட்டை பகிரங்கமாக எழுப்பியுள்ளார்.
அழகர்சாமியின் குதிரை படத்தில் சுசீந்திரன் உதவியாளராக வேலை பார்த்தவர் இந்த புவனராஜன்.

அந்தப் படத்துக்குப் பிறகு விலகி தனியாகப் படம் பண்ணும் முயற்சியில் இருந்தாராம்.
இந்த நிலையில் தன்னைத் தேடி வந்த இயக்குநர் சுசீந்திரன், அடுத்த படத்துக்காக கதை கேட்டதாகவும், ஆறேழு கதைகளைக் கேட்ட பிறகு, எதுவும் பிடிக்கவில்லை என்று கூறித் திரும்பிய சுசீந்திரன், பின்னர் தான் சொன்ன கதை ஒன்றையே, சற்று மாற்றி பாண்டிய நாடு என படமாக எடுத்துவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தக் கதையைத்தான் படமாக எடுத்தேன் என்ற உண்மையைக் கூறாமல், தன் வங்கிக் கணக்கில் ரூ 25 ஆயிரம் பணத்தையும் சுசீந்திரன் போட்டுள்ளார் என்றும் புவனராஜ் கூறினார்.
இந்த குற்றச்சாட்டு குறித்து இயக்குநர் சுசீந்திரனைத் தொடர்பு கொள்ள முயன்றோம். ஆனால் அவர் எந்த அழைப்பையும் ஏற்கவில்லை என்ற பதிலே வந்தது.
தயாரிப்பாளரான விஷாலைத் தொடர்பு கொண்டபோது, தனக்கு இதுபற்றி எதுவும் தெரியாது என்று கூறிவிட்டார்.


Click it and Unblock the Notifications











