பிரபல பின்னணிப் பாடகர் பம்பா பாக்யா உடல்நலக் குறைவால் மரணம்: திரையுலகினர், ரசிகர்கள் துயரம்
சென்னை: ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பல பாடல்களைப் பாடி கவனம் ஈர்த்தவர் பம்பா பாக்யா.
சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்த பம்பா பாக்யா உடல்நலக் குறைவால் காலமானார், அவருக்கு வயது 49.
பம்பா பாக்யாவின் மறைவுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

வித்தியாசமான குரலுக்கு சொந்தக்காரர்
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானால் சினிமா பின்னணிப் பாடகராக அறிமுகப்படுத்தப்பட்டார் பம்பா பாக்யா. திரைப்பட பாடல்களை பாடுவதற்கு முன்னதாக பல பக்திப் பாடல்களை பாடி பிரபலமானவர் பம்பா பாக்யா. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.O படத்தில் இடம்பெற்ற 'புல்லினங்கால்' பாடலை மனோ, ஏ.ஆர். அமீன் ஆகியோருடன் பம்பா பாக்யாவும் இணைந்து பாடியுள்ளார். இவரது குரல் மிகவும் வித்தியாசமாக இருப்பதால், பம்பா பாக்யா பாடிய பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

சர்கார் சிம்டாங்கரான் கொடுத்த சூப்பர் ஹிட்
புல்லினங்கால் பாடலைத் தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் படத்திலும் ஒரு சூப்பர் ஹிட் பாடலை அசத்தினார் பம்பா பாக்யா. 'சிம்டாங்காரன்' எனத் தொடங்கும் அந்தப் பாடலை ஏ.ஆர். ரஹ்மான் வித்தியாசமான முறையில் கம்போஸ் செய்திருப்பார். பம்பா பாக்யா அந்தப் பாடலை இன்னும் வித்தியாசமாக பாடி, ரசிகர்களை கொண்டாட வைத்தார். கானா பாடல் பின்னணியில் வெளியான சிம்டாங்காரன் பாடல், சூப்பர் ஹிட் அடித்ததோடு, பம்பா பாக்யா க்கும் மிகப் பெரிய அடையாளத்தைக் கொடுத்தது.

பொன்னி நதி பாடலை தொடங்கும் பாம்பே பாக்யா
தொடர்ந்து ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிவந்த பம்பா பாக்யா, பக்திப் பாடல்கள் பாடுவதிலும் பிஸியாக இருந்தார். மேலும், ரஹ்மானின் இசைப் பள்ளியிலும் பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல் தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்படங்களுக்கு ஆர்ட் ஒர்க் செய்துவந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தில் இடம்பெற்றுள்ள 'பொன்னி நதி' பாடலையும் பம்பா பாக்யா பாடியுள்ளார். இந்தப் பாடலின் முதல் அடியை பம்பா பாக்யா தான் பாடியிருப்பார்.

உடல்நலக் குறைவால் காலமானார்
'பொன்னி நதி' பாடலில் பம்பா பாக்யாவின் குரல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமாவில் திறமையான பின்னணிப் பாடகரான பம்பா பாக்யா பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பாரதவிதமாக அவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். நேற்று மதியம் மாரடைப்பு காரணமாக அண்ணா நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல்
இதனையடுத்து அவருக்கு இதய துடிப்பு குறைந்து, சிறுநீரக செயல்பாடும் குறைந்து வயிற்றில் அதிக நீர் சேர்ந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் சிகிச்சை சிகிச்சை பலனின்றி பம்பா பாக்யா மரணம் அடைந்துள்ளார். அவருக்கு வயது 49. சென்னை பாடி அருகே தனது குடும்பத்துடன் வசித்து வந்த பம்பா பாக்யாவின் மரணம், திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பலரும் பாம்பே பாக்யாவின் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











