TVK நிகழ்ச்சியில் பாட்டு.. அது கத்தியால் குத்திக் கொள்வதற்கு சமம்.. மன்னிப்பு கேட்ட வேல்முருகன்
சென்னை: நடிகர் விஜய் 2024ஆம் ஆண்டில் தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது அரசியல் கட்சியைத் தொடங்கினார். ஆரம்பத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்ப்புகள் நிலவின. எனினும், அக்கட்சி தற்போது தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையே பிரதான இலக்காக கொண்டுள்ளது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாவது ஆண்டு தொடக்க விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பின்னணி பாடகர் வேல்முருகன் பாடிய பாடலுக்கு விஜய் உற்சாகமாக நடனமாடி தொண்டர்களை மகிழ்வித்தார். இந்நிலையில் தான் பாடல் பாடியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார் பாடகர் வேல்முருகன்.
ரசிகர்களின் பெருங்கால கோரிக்கையையும், தனது அரசியல் ஆர்வத்தையும் கருத்தில் கொண்டு, விஜய் 2024இல் தமிழக வெற்றிக் கழகத்தைத் தோற்றுவித்தார். கட்சி தொடங்கப்பட்ட அதே ஆண்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்ற போதிலும், அரசியல் களத்தில் புதிய அனுபவம் இல்லாததாலும், கள நிலவரங்களை புரிந்து கொள்ள அவகாசம் தேவைப்பட்டதாலும், அந்தத் தேர்தலில் போட்டியிடும் முடிவை அவர் தவிர்த்தார்.
அரசியலுக்கு வந்த பின்னர், பல்வேறு மேடைகளில் ஏறி தமிழ்நாடு ஆளும் கட்சியான திமுகவை விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார். இதற்கு திமுக தரப்பிலிருந்தும் கடுமையான எதிர்வினைகள் வந்தன. தனது சினிமா வாழ்க்கையின் உச்சத்தில் இருக்கும் போது அரசியலில் அடியெடுத்து வைத்த விஜயின் இந்த துணிச்சலான முடிவை பலரும் பாராட்டி பேசுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஜயின் அரசியல் பயணத்தில் பெரும் சவாலாகவும், சங்கடமாகவும் அமைந்தது கரூர் துயர சம்பவம் தான். அவர் நிகழ்வுக்கு தாமதமாக வந்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ) விசாரணை நடத்தி வருகிறது. அண்மையில், விஜய் நேரில் அழைக்கப்பட்டு இரு முறை விசாரிக்கப்பட்டார். அவர் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் நிதானமாகப் பதிலளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜன நாயகன்: இதேபோல், 'ஜனநாயகன்' என்ற படத்தின் வெளியீடும் விஜய்க்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் படக்குழு நீதிமன்றத்தை நாடியது. நீதிமன்றத்தின் தாமதத்தால், கடந்த மாதமே வெளியாகி இருக்க வேண்டிய படம் இன்றும் திரையரங்கிற்கு வரவில்லை. விஜயின் அரசியல் நுழைவால் இதுபோன்ற நெருக்கடிகள் வரும் என்று ரசிகர்கள் கணித்திருந்தாலும், இவ்வளவு சவால்கள் ஏற்படும் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

முருகர் பாடல்: பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி அலுவலகத்தில் நேற்று அதாவது பிப்ரவரி 2ஆம் தேதி நடைபெற்ற மூன்றாவது ஆண்டு தொடக்க விழாவில் விஜய், கட்சி நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின்போது, பின்னணிப் பாடகர் வேல்முருகன் விஜய்யைப் புகழ்ந்து பாடிய பாடல் ஒன்று ஒலிபரப்பானது. அதனைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்ட விஜய், மேடையிலேயே ஒரு குட்டி நடனம் ஆடினார். இந்நிலையில் வேல்முருகன் பாடிய பாடலானது முருகர் பாடலின் மெட்டாக இருந்ததால் எதிர்ப்புகளும் அதிருப்திகளும் ஏற்பட்டது. இந்நிலையில் வேல்முருகன் மன்னிப்பு கேட்டுள்ளார்.
மன்னிப்பு: இது தொடர்பாக செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "நான் பாட்டு பாடியதற்கும் விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உற்சாகப்படுத்த வேண்டுமென அந்த வரிகளைப் பாடினேன். முருகனை அவமதிப்பது என்னை நானே கத்தியால் குத்திக் கொள்வதற்கு சமம்" உள்ளத்திலே நீ இருக்க பாடல் வரிகளில் தவெக தலைவர் விஜயைக் குறிப்பிட்டு பாடியது குறித்து பாடகர் வேல்முருகன் கைகூப்பி மன்னிப்பு கோரியுள்ளார். இது தொடர்பான தகவல்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











