கர்னாட் - கிரேஸி மோகன் அடுத்தடுத்து மரணம்.. நாடக உலகுக்கு மிக மோசமான நாள்!
Recommended Video
சென்னை: பிரபல நடிகரும், கமலின் ஆஸ்தான வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் 2 மணி அளவில் உயிர் இழந்தார்.
என்ஜினியரிங் படித்த கிரேஸி மோகன் நாடகங்கள் எழுதத் துவங்கினார். பின்னர் சினிமா துறையில் வசனகர்த்தாவாக அறிமுகமாகி நடிகரானார். கமல் ஹாஸனின் ஆஸ்தான வசனகர்த்தாவாக இருந்தவர் கிரேஸி மோகன்.

இந்நிலையில் இன்று காலை 11 மணி அளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கவலைக்கிடமான நிலையில் இருந்த அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இதற்கிடையே அவர் இறந்துவிட்டதாக தகவல் வெளியாகி தீயாக பரவியது. இதை பார்த்த திரையுலக பிரபலங்களோ, கிரேஸி மோகன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். அவர் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டிய நேரம், தயவு செய்து யாரும் வதந்தி பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். அவர்கள் கோரிக்கை விடுத்த சில நிமிடங்களில் அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
கிரேஸி மோகனின் நாடகங்களை பார்த்து அவருக்கு தீவிர ரசிகரானவர்கள் பலர். அவர்கள் எல்லாம் அவர் சீக்கிரம் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர். ஆனால் அவர்கள் நினைத்தது போன்று நடக்கவில்லை.
பிரபல நடிகரும், நாடக எழுத்தாளருமான கிரிஷ் கர்னாட் இன்று காலை காலமானார். இந்நிலையில் மதியம் 2 மணிக்கு கிரேஸி மோகனும் உயிர் இழந்துள்ளார். சினிமா மற்றும் நாடக ரசிகர்களுக்கு இதை விட மோசமான நாள் வேறு எதுவும் இருக்க முடியாது.
இத்தனை ஆண்டுகளாக ரசிகர்களை கவலையை மறந்து சிரிக்க வைத்த கிரேஸி மோகன் முதல்முறையாக அவர்களை கவலையில் கண்ணீர் சிந்த வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications