பிரதமர் மோடி பற்றிய குறும்படத்திற்கு குவியும் பாராட்டுக்கள்!
பிரதமர் மோடியை மையமாக வைத்து தயாராகியுள்ள குறும்படம் பாராட்டுக்களை பெற்றுள்ளது.
Recommended Video

டெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பால்ய வயது வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள குறும்படம் பாராட்டுக்களை பெற்றுள்ளது.
32 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த குறும்படத்திற்கு சலோ ஜீத்தே ஹெய்ன் என்று பெயரிட்டுள்ளனர். இக்குறும்படத்தை "டிங்யா" என்ற மராத்தி படத்தை இயக்கிய மங்கேஷ் கடவாலே இயக்கியுள்ளார். மகாவீர் ஜெயின் மற்றும் புஷன் குமார் இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் நரு என்ற சிறுவன் கதாப்பாத்திரம் பிரதமர் நரேந்திர மோடியின் பால்ய வயது வாழ்க்கையிலிருந்து தழுவி சித்தரிக்கப்பட்டுள்ளது. நரு யாருக்காக நீ வாழ்கிறாய் என கேள்வி கேட்டுக்கொள்கிறான்.
பிறகு விவேகானந்தரின் புத்தகத்தைப் படிக்கும்போது அதற்கான விடை கிடைக்கிறது. "யார் மற்றவர்களுக்காக வாழ்கிறார்களோ அவர்களே வாழ்வார்கள்" என்ற விவேகானந்தரின் பொன்மொழியைப் பின்பற்றி நரு வாழ ஆரம்பிக்கிறான்.
ரயில் நிலையத்தில் தேனீர் விற்பது, விவேகானந்தரின் பொன்மொழிகளை பின்பற்றி வாழ்க்கையை வாழ்வது என பிரதமர் நரேந்திர மோடியுடன் தொடர்புடைய நிறைய விஷயங்களை இப்படத்தில் காட்சிப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இக்குறும்படம் பிரத்தியேகமாக குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்துக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டுள்ளது. படத்தை பார்த்த ராம்நாத் கோவிந்த படக்குழுவினரையும் நருவாக நடித்த சிறுவனையும் வெகுவாக பாராட்டியுள்ளார்.
அதேபோல், நேற்று ராஜ்யசபா தலைமைச்செயலக அரங்கில் திரையிடப்பட்டது. துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், ரவி சங்கர் பிரசாத், ராஜ்யவர்தன் ரத்தோர், ஜெயந்த் சின்கா மற்றும் ஜேபி,நட்டா உள்ளிட்டோர் கண்டுகளித்தனர். இக்குறும்படம் ஊக்கமூட்டும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இக்குறும்படம் ஜூலை 29ஆம் தேதி ஸ்டார் நெட்வொர்க் மற்றும் ஹாட்ஸ்டாரில் வெளியிடப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications











