நம்ம சமூகத்தை நல்லா காட்ட வேண்டியது தானே.. ஏன் இப்படி மோசமா காட்டுற.. முத்தையாவுக்கு மேடையில் டோஸ்!
சென்னை: உலக அளவில் சினிமா என்பது வெறுமனே பொழுதுபோக்கு மட்டுமல்ல. சினிமா அந்தந்த மண்ணின் மக்களை பிரதிபலித்துக் கொண்டே இருக்கிறது. மக்களின் வாழ்வியலானது சினிமா மூலம் மக்களுக்கு தெரிகிறது. ஈரானிய மக்களின் வாழ்க்கையும் கொரிய மக்களின் வாழ்க்கையும் இங்கு சினிமா மூலம் தான் வெளிப்படுகிறது. நமது வாழ்வியலும் உலக அரங்கிற்கு நம் மக்களின் வாழ்க்கையை ரத்தமும் சதையுமாக எடுக்கும் படங்கள் மூலம் தான் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இப்படியான சினிமாக்கள் சர்வதேச அரங்கில் நம்மைப் பற்றிய அறிமுகத்தையும் நமக்குள்ளே பெரும் உரையாடலயும் தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டே இருக்கிறது. இப்படி இருக்கையில் PMT இசக்கி ராஜாவின் சமீபத்திய மேடைப்பேச்சு பலராலும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதாவது, " தமிழ் சினிமாவில் பலரும் படம் எடுக்கிறார்கள், அவர்கள்தான் தேவர் சமூக மக்களை ரவுடிகளாகவும் பொறுக்கிகளாகவும் காட்சிப் படுத்துகிறார்கள் என்றால், தேவர் சமூகத்தைச் சேர்ந்த இயக்குநர் முத்தையாவும் அதே தவறை தான் செய்து வருகிறார்.

முத்தையாவுக்கு விளாசல்: இதனால் முத்தையாவை அழைத்து இது தொடர்பாக மிகவும் காட்டமாக பேசினேன். தேவர் சமூக மக்களை மற்றவர்கள்தான் ரவுடிகளாக சித்தரிக்கிறார்கள் என்றால், நீயும் இப்படிச் சித்தரிக்கிறாயே? இந்த சமூகத்தில் இருந்து நீதிபதி ஆகி உள்ளார்கள். அரசின் உயர் பொறுப்புகளுக்குச் சென்றுள்ளார்கள். காவல்துறை உயர் அதிகாரிகளாக உள்ளார்கள். அது போல காட்சிப் படுத்தலாமே என்று திட்டி விட்டேன். உடனே, அவர் அடுத்த படத்தில் கதாநாயகன் வக்கீல் என்று கூறினார். நானும் மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால் அந்த வக்கீலையும் கடைசியாக ரவுடியாக்கி கத்தியைக் கொடுத்து நடுரோட்டில் அமர வைத்துவிட்டார்.
வரவேற்பு: ஒரு படம் எடுத்தால் உலகம் முழுவதும் உள்ளவர்கள் பார்ப்பார்கள் என்று தெரியும். அப்படி இருக்கையில் தேவர் சமூக மக்களை தொடர்ந்து இப்படி தவறாகவும் மோசமாகவும் சித்தரித்து வருவது தவறு. தேவர் சமூக இளைஞர்கள் சண்டியர் தனம் செய்வதை பெருமைக்குரியதாக கருதக் கூடாது. மாறாக படித்து அரசு உயர் பதவிகளுக்கும் பொறுப்புகளுக்கும் செல்ல வேண்டும்" என்று பேசி உள்ளார். அவரது இந்த பேச்சு பலரது கவனத்தை கவர்ந்தது மட்டும் இல்லாமல் பலரும் பாராட்டி வருகிறார்கள். மேலும் சிலர் இனிமேலாவது முத்தையா தனது படங்களில் கதாநாகனை ரவுடி போல சித்தரிக்காமல் இருக்க வேண்டும் என்று பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











