Jani Master: பெண் நடன கலைஞர் கொடுத்த பாலியல் புகார்.. போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஜானி மாஸ்டர்
விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட், வாரிசு உள்ளிட்ட படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றிய பிரபல டான்ஸ் மாஸ்டர் ஜானி என்கிற ஷேக் ஜானி பாஷா தன்னை பலமுறை பலாத்காரம் செய்ததாக இளம் நடனக் கலைஞர் கொடுத்த புகார், ஒட்டுமொத்த திரை உலகையும் உலுக்கியது. குறிப்பாக தான் மைனராக இருந்தபோதே அவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக, தற்போது 21 வயதை எட்டியுள்ள பெண் நடனக் கலைஞர் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.
ஜானி மாஸ்டர் டீமில் பெண் நடனக் கலைஞராக இருந்த பாதிக்கப்பட்ட பெண், அவருடைய குழுவில் இருந்து விலகி நடன இயக்குநராகவும் செயல்பட்டு வருகிறார். 21 வயதான அவர் மிகவும் தைரியமாக ஜானி மாஸ்டர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். ஹைதராபாத், சென்னை, மும்பை என படப்படிப்புக்குச் சென்ற இடங்களில் எல்லாம் ஜானி மாஸ்டர் தன்னிடம் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ளார். ராய்துர்காம் காவல் நிலையத்தில் நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கு போக்சோ வழக்காக பதிவு செய்யப்பட்டது.

உலகப் புகழ் அடைந்த புட்டபொம்மா பாடல் உருவாக்கப்பட்ட படப்பிடிப்பின்போதும் கூட தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக, அந்த பெண் நடனக் கலைஞர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஏற்கனவே திருமணமான ஜானி மாஸ்டர், தன்னை காதலிப்பதாகவும் கூறி, மதம் மாறினால் திருமணம் செய்து கொள்கின்றேன் எனக் கூறியதாகவும் அந்த புகாரில் பாதிக்கப்பட்ட பெண் நடனக் கலைஞர் குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் குறித்த செய்திகள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஹேமா கமிட்டி: மலையாள சினிமா உலகில் ஹேமா கமிட்டி ஏற்படுத்திய பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் தெலுங்குத் திரையுலகத்திலும் அது போன்ற கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என குரல் எழுந்து வருகின்றது. குறிப்பாக நடிகை சமந்தா இது தொடர்பாக ஓபனாக பேசினார். இப்படியான நிலையில் ஜானி மாஸ்டர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

நீக்கம்: ஜானி மாஸ்டர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டதால், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். ஜானி மாஸ்டர் இந்த ஆண்டு நடந்து முடிந்த ஆந்திர சட்ட மன்ற பொதுத் தேர்தலில் ஜனசேனா கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் மீது பாலியல் புகார் எழுந்த நிலையில் அவரை உடனடியாக கட்சியிலிருந்து நீக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், ஜானி மாஸ்டர் மீது குற்றம் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டதாக பேச்சுகள் எழுந்தது.
கைது: இந்நிலையில், இந்த புகாருக்குப் பின்னர், ஜனசேனா கட்சியில் இருந்தும் நீக்கப்பட்ட ஜானி மாஸ்டர் தலைமறைவாக இருந்தார். தொடர்ந்து ஹைதராபாத் காவல்துறை அவரைத் தேடி வந்தது. அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், ஜானி மாஸ்டர் தலைமறைவானது உறுதியானது. இந்நிலையில் இன்று அதாவது, செப்டம்பர் 19ஆம் தேதி ஜானி மாஸ்டரை ஹைதராபாத் காவல்துறையினர் கோவாவில் வைத்து கைது செய்துள்ளனர். இந்த தகவல் தெலுங்கு திரை உலகில் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த தென்னிந்திய திரை உலகையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. மேலும் ஜானி மாஸ்டர் போன்ற காம கொடூரர்கள் மீது பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக புகார் அளிக்க வேண்டும் எனவும் பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











