பிரபல பாடலாசிரியர் பிரான்சிஸ் கிருபா திடீர் மரணம்.. திரைத்துறையினர் இரங்கல்!
சென்னை: பிரபல கவிஞரும் பாடலாசிரியருமான பிரான்சிஸ் கிருபா காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியை அடுத்த பத்தினிப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெ பிரான்சிஸ் கிருபா. பள்ளிப்படிப்பை நிறைவு செய்துள்ள பிரான்சிஸ் கிருபா, நவீன எழுத்தாளராக வலம் வந்தார்.
பிரான்சிஸ் கிருபா மல்லிகைக் கிழமைகள், ஏழுவால் நட்சத்திரம், நிழலின்றி ஏதுமற்றவன், மெசியாவின் காயங்கள், வலியோடு முறியும் மின்னல் என பல கவிதை நூல்களை எழுதியுள்ளார்.

பல்வேறு விருதுகள்
மேலும் ஏராளமான புதினங்களையும் எழுதியுள்ளார் பிரான்சிஸ் கிருபா. தனது படைப்புகளுக்காக 2008 ஆம் ஆண்டுக்கான நெய்தல் இலக்கிய அமைப்பின் சுந்தர ராமசாமி விருது, சம்மனசுக்காடு கவிதை தொகுப்புக்காக 2017ஆம் ஆண்டுக்கான சுஜாதா விருது மற்றும் மீரா விருது, ஆனந்த விகடன் விருது என பல விருதுகளை பெற்றுள்ளார்.

காமராஜரின் வாழ்க்கை வரலாறு
தமிழ் திரையுலகில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடிகுழு, அழகர்சாமியின் குதிரை, நித்திலன் சுவாமிநாதனின் குரங்கு பொம்மை மற்றும் ராட்டினம் ஆகிய படங்களில் பாடல்களை எழுதியுள்ளார். அதுமட்டுமின்றி பிரான்சிஸ் கிருபா காமராஜரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்துக்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதி இருந்தார்.

நேற்றிரவு மரணம்
இந்நிலையில் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த கவிஞர் பிரான்சிஸ் கிருபா, நேற்று இரவு சென்னையில் காலமானார். பிரான்சிஸ் கிருபாவின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் பிரான்சிஸ் கிருபாவின் கவிதைகளை பதிவிட்டும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

முத்தம் தரும் போதெல்லாம்
மறைந்த பிரான்சிஸ் கிருபாவின் கவிதையை பகிர்ந்து சிலிர்க்கச் சிலிர்க்க
அலையை மறித்து
முத்தம் தரும் போதெல்லாம்
துடிக்கத்துடிக்க
ஒரு மீனைப் பிடித்து
அப்பறவைக்கு தருகிறது
இக்கடல்.. என பிரான்சிஸ் கிருபாவின் கவிதையை பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார் இந்த நெட்டிசன்.

யாசிக்கும் கிழவனை பணயம் வைத்து
மற்றொரு ரசிகரான இவர்,
சிதைந்த உடலுமாய்
நிழலில் அமர்ந்து
யாசிக்கும் கிழவனை
பணயம் வைத்து
கைச் சிட்டுகளாய்
பழுத்த இலைகளை இறக்கி
பகலைச் சூதாடிக் கழிக்கின்றன
பூவரச மரங்கள்.. என பிரான்சிஸ் கிருபாவின் கவிதையை ஷேர் செய்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

சொந்த ஊரில் இறுதிச்சடங்கு
பிரான்சிஸ் கிருபாவின் உடல் இறுதிச் சடங்கிற்காக சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பத்தினிப்பாறை கிராமத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு குடும்ப வழக்கப்படி அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











