விதவையான கேமரா கேவிக்கேவி அழுகிறது.. கே.வி.ஆனந்த் திடீர் மரணம்.. கவிஞர் வைரமுத்து உருக்கம்!
சென்னை: கேவி ஆனந்தின் மறைவால் விதவையான கேமரா கேவிகேவி அழுவதாக கவிஞர் வைரமுத்து உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
பல பத்திரிக்கைகளில் போட்டோகிராஃபராக பணியாற்றிய கேவி ஆனந்த், ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராமிடம் உதவியாளராக பணிபுரிந்தார்.
பின்னர் மோகன் லாலின் தென்மாவின் கொம்பத் என்ற படத்தின் மூலம் ஒளிபதிவாளராக அறிமுகமான கேவி ஆனந்த் முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றார்.

முன்னணி ஹீரோக்கள்
தமிழில் காதல் தேசம் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். கனாகண்டேன் படத்தின் இயக்குநராக அறிமுகமான கேவி ஆனந்த், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

திடீர் மாரடைப்பு
அயன், கோ, கவன், மாற்றான், அனேகன், காப்பான் உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார் கேவி ஆனந்த். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருந்து வந்த கேவி ஆனந்த் இன்று காலை திடீர் மாரடைப்பால் காலமானார்.

நம்ப முடியாமல் இரங்கல்
அவரது திடீர் மறைவு ரசிகர்கள் மற்றும் தமிழ் சினிமா பிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சினிமா பிரபலங்கள் பலரும் அவரது மறைவை நம்ப முடியாமல் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

விதவையான கேமரா..
கேவி ஆனந்தின் மறைவு குறித்து கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ள டிவிட்டில்,
வருந்துகிறேன் நண்பா!
திரையில்
ஒளிகொண்டு
சிலை செதுக்கினாய்!
வாஜி வாஜி பாடலை
ராஜ கவிதையாய் வடித்தெடுத்தாய்!
என்
எத்தனையோ பாடல்களை
ரத்தினமாய் மாற்றினாய்!
இதோ
உனக்கான இரங்கல்பாட்டை
எங்ஙனம் படம் செய்வாய்?
விதவையான கேமரா
கேவிக்கேவி அழுகிறது
கே.வி.ஆனந்த்!
ஒளியாய் வாழ்வாய்
இனி நீ... என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

பல பாடல்கள்..
கேவி ஆனந்த் இயக்கிய அயன் படத்தில் நெஞ்சே நெஞ்சே பாடல், அனேகன் படத்தில் ரோஜா காதலே, ஆத்தாடி ஆத்தாடி, தொடு வானம் ஆகிய மூன்று பாடல்களை எழுதியுத்துள்ளார். காப்பான் படத்தில் விண்ணில் விண்மீன், ஹே அமீகோ ஆகிய பாடல்களை எழுதியுள்ளார் வைரமுத்து என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











