என் பாட்டாளி மக்கள் பசியாறட்டும்.. 500 குடும்பங்களுக்கு அரிசி மூட்டைகளை வழங்கிய வைரமுத்து!
சென்னை: ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியை நேரில் சந்தித்த கவிஞர் வைரமுத்து 500 குடும்பங்களுக்கான அரிசி மூட்டைகளை வழங்கியுள்ளார்.
Recommended Video
கொரோனா வைரஸ் பரவலால் நாடு முழுவதும் நான்காவது கட்டமாக ஊரடங்கு நீடித்து வருகிறது. இதனால் சினிமா தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் தினக்கூலியை நம்பியுள்ள திரைப்பட தொழிலாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அன்றாட உணவுக்கே கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு உதவுமாறு ஊரடங்கின் தொடக்கத்திலேயே திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளமான ஃபெப்சியின் தலைவர் ஆர் கே செல்வமணி கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்று நடிகர்கள் ரஜினிகாந்த், ராகவா லாரன்ஸ், சிவகார்த்திகேயன், அஜித், விஜய், சூர்யா என பலரும் ஃபெப்சி அமைப்புக்கு நிதியுதவி வழங்கினர்.
மேலும் பல பிரபலங்கள் அரிசி மூட்டைகள், பருப்பு உள்ளிட்ட மளிகை என பொருள் உதவியும் செய்து வருகின்றனர். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து ஃபெப்சி அமைப்புக்கு 500 அரிசி பைகளை வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம்
கலைத் தொழிலாளர்களின் 500 குடும்பங்களுக்கு
அரிசிப் பைகளை ஒப்படைத்தேன். எங்கள் பாட்டாளி மக்கள்
கொஞ்சம் பசியாறட்டும்... என பதிவிட்டுள்ளார்.

கவிஞர் வைரமுத்து செய்த இந்த உதவிக்கு பலரும் அவரை டிவிட்டரில் வாழ்த்தியுள்ளனர். பலர் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











