எங்கள் மூளையில் ஒரு மூலையில் கூடு கட்டிப் பாடும் குயிலே.. எஸ்.பி.பி. குறித்து வைரமுத்து நெகிழ்ச்சி
சென்னை: பிரபல பாடகரான எஸ்பி பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் விரைவில் மீண்டு வர வேண்டும் என கவிதை மொழியிலும், பாடல் பாடியும் உருக்கமாக தெரிவித்துள்ளார் கவிஞர் வைரமுத்து.
Recommended Video
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி இரவு அவரது உடல்நிலை மோசமடைந்தது.

இதனை தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டும் என கவிதை மொழியில் பேசியும், காதல் ரோஜா பாடல் மெட்டில் பாட்டுப் பாடியும் உருக்கமாக வீடியோ வெளியிட்டுள்ளார் கவிஞர் வைரமுத்து.
எஸ்பிபி அவர்களே..
எங்கள் வாழ்வின் அன்றாடமே..
எங்கள் மூளையில் ஒரு மூலையில் கூடு கட்டிப் பாடும் குயிலே..
மீண்டு வரவேண்டும்...
இசை உலகை நீங்கள் ஆண்டு வரவேண்டும்...
என் முதல் பாடல் பாடலை பாடியவன் நீ...
என் கடைசிப் பாடலையும் நீ தான் பாட வேண்டும்...
மேகங்கள் வந்து வந்து போகும்..
வானம் நிரந்தரம்...
இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் என்று மாறி மாறி நிகழ்ந்த என் கலை வாழ்வில் 40 ஆண்டுகளாய் மாறாத மகா கலைஞன் நீ...
நீ மீண்டு வருவாய்...
இசை உலகை ஆண்டு வருவாய்...
உனக்காக இந்த உலகமே வேண்டி நிற்கிறது...
இந்த உலகத்துக்கு இன்பத்தை மட்டுமே கொடுத்து பழகியவன் நீ...
துன்பம் கொடுக்கமாட்டாய் என்று எனக்கு தெரியும்...
பாட்டுக்குயிலே..
சிறகை விரி..
கூண்டை உடை..
மீண்டு வா.. இசை உலகை ஆண்டு வா.. பாட வா..
இவ்வாறு கவிதை மொழியில் பேசியிருக்கும் கவிஞர் வைரமுத்து, ரோஜா படத்தில் இடம் பெற்ற காதல் ரோஜாவே பாடல் மெட்டில், பாடல் ராஜாவே எங்கே நீ எங்கே.. கண்ணீர் வழியுதய்யா இங்கே.. கண்ணுக்குள் நீதான்.. கண்ணீரில் நீதான்.. கண்மூடி பார்த்தால்.. காதெல்லாம் நீதான்.. என்னானதோ ஏதானதோ... சொல்.. சொல்.. என பாட்டுப்பாடி உருகி இருக்கிறார். மேலும் பாலு.. உங்களுக்காக இசை உலகம் காத்திருக்கிறது.. என்று தனது வீடியோவை முடித்திருக்கிறார் கவிஞர் வைரமுத்து.


Click it and Unblock the Notifications











