உலகம் ஒருகணம் நிறமிழந்துபோனதாய் நெஞ்சுடைகிறேன்.. ஒளிப்பதிவாளர் கண்ணன் மறைவு.. வைரமுத்து உருக்கம்!
சென்னை: பிரபல ஒளிப்பதிவாளர் கண்ணன் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து அதிர்ச்சியையும் இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
பிரபல ஒளிப்பதிவாளரான பி கண்ணன் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதய நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று பிற்பகல் சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தது.

மறைந்த ஒளிப்பதிவாளர் கண்ணன், பிரபல இயக்குநர் பீம் சிங்கின் மகன் ஆவார். பிரபல எடிட்டரான பி லெனின் சகோதரராவார். மறைந்த ஒளிப்பதிவாளர் கண்ணன், இயக்குநர் பாரதிராஜாவின் கண்கள் என்றழைக்கப்பட்டவர்.
பாரதிராஜாவின் நிழல்கள் முதல் அவரது பெரும்பாலான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தமிழில் 50 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார் பி கண்ணன். அவற்றில் 40 படங்கள் இயக்குநர் பாரதிராஜாவினுடையது என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது திடீர் மறைவு திரைத்துறையினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் பி. கண்ணனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஒளிப்பதிவாளர் கண்ணனின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில்,
பாரதிராஜாவின் மனக்கண்ணாகவும்
கலைக் கண்ணாகவும் விளங்கியவர் பி.கண்ணன்.
என் முதல் பாடலான
பொன்மாலைப்பொழுதுக்குத் தங்கம் பூசியவர்.
தேசியவிருது பெற்ற என் 7பாடல்களில்
2பாடல்களை ஒளிபெயர்த்தவர்.
குணவான் ஆகிய கனவான்.
அவர் மறைவால் இந்த உலகம் ஒருகணம்
நிறமிழந்துபோனதாய் நெஞ்சுடைகிறேன்.. என உருக்கமாக தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











