மீன்கள்தான் உண்பதற்கு... மீனவர்கள் அல்ல! - கவிஞர் வைரமுத்து கண்டனம்
சென்னை: தமிழக மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் கவிஞர் வைரமுத்து.
தமிழக மீனவர் பிரிட்ஜோ, இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்துவிட்டதாகக் கூறி இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் வழக்கம்போல மத்திய அரசும், வழக்கத்துக்கு மாறாக தமிழக அரசும் மவுனம் சாதிக்கின்றன. இலங்கையைக் கண்டித்து ஒப்புக்குக் கூட ஒரு அறிக்கை விடவில்லை.

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள பல தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள் இலங்கையின் இந்த மனிதாபிமானமற்ற செயலைக் கண்டித்து வருகின்றனர்.
கவிஞர் வைரமுத்து தனது கண்டன அறிக்கையில், "தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
கடந்த 30 ஆண்டுகளில் 730 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. மத்திய அரசு இனிமேலாவது தன் மெளனத்தைக் கலைத்துக்கொள்ள வேண்டும். இதுவே கடைசி மரணமாக இருக்கட்டும். மீன்கள்தான் உண்பதற்கு; மீனவர்கள் அல்லர்," என்று கூறியுள்ளார்..


Click it and Unblock the Notifications











