தமிழ்கொடுத்த பொருளைத் தமிழருக்குத் தருகிறோம்! பிறந்த நாளில் செய்த உதவிகளை பட்டியலிட்ட வைரமுத்து!
சென்னை: தமிழ் திரையுலகில் மட்டும் இல்லாமல் தமிழ் இலக்கியம், பண்பாடு ஆகிய தளங்களில் மிகவும் முக்கியமான ஆளுமையாக விளங்கி வருபவர் கவிப்பேரரசு என அழைக்கப்படும் வைரமுத்து. 1953ஆம் ஆண்டு பிறந்த இவர் நேற்று அதாவது ஜூலை 13ஆம் தேதி தனது 71வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இவருக்கு அவரது ரசிகர்கள் தொடங்கி திரைப்பிரலங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
தனது பிறந்த நாளை முன்னிட்டு கவிப்பேரரசு வைரமுத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்துள்ளார். அது குறித்து மிகவும் மகிழ்ச்சியாக தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதனை ஒரு கவிதை நடையிலேயே எழுதி வெளிப்படுத்தியுள்ளார். மேலும் தமிழ்கொடுத்த பொருளைத் தமிழருக்குத் தருகிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளதை மேற்கோள்காட்டி பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர். வைரமுத்துவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூற அவரது தோட்டத்து இல்லத்திற்கு எம்.பி. தங்கத் தமிழ்ச்செல்வன் அமைச்சர் ஐ. பெரியசாமி ஆகியோர் நேரில் சென்று வாழ்த்தினர்.

கவிப்பேரரசு தனது எக்ஸ் பக்கத்தில், "நேற்று என் பிறந்தநாள்
கவிஞர் தோட்டம்
நிகழ்விடமனது
என்ன அன்பு
எவ்வளவு ஆசை
அழைப்பிதழ் தயாரிக்காத போதே
பிதுக்கி எடுத்தது பெருங்கூட்டம்
பழ.புகழேந்திக்குக்
கவிஞர்கள் திருநாள் விருது
ரூபாய் 25ஆயிரம்
நலிவுற்ற குடும்பத்து
மாணவர் ஐவருக்கு
ஒரு லட்சம் கல்வித்தொகை
பெரியகுளம்
நூற்றாண்டு நூலகத்துக்கு
ஒரு லட்சம் தொண்டுத் தொகை
பொருள் பெற்றோர்
புன்னகையை விடவும்
பொருள் ஒன்றும் உயர்ந்ததில்லை
தமிழ்கொடுத்த பொருளைத்
தமிழர்க்குத் தருகிறோம்
இவ்வுறவை யான்பெறவே
என்னதவம் செய்துவிட்டேன்!" என பதிவிட்டுள்ளார். கவிப்பேரரசு வைரமுத்துவின் இந்த பதிவுக்கு பலரும் லைக்குகளையும் வாழ்த்துகளையும் தட்டிவிட்டு வருகின்றனர்.

ஆச்சரியமூட்டும் வார்த்தைகள்: வைரமுத்து என்றாலே, தான் எழுதும் திரைப்பாடலில் அதிகமாக புதிய சொற்களைப் புகுத்திய பெருமைக்குரியவர் எனக் கூறும் அளவிற்கு ரசிகர்களை ஆச்சரியமூட்டும் வார்த்தைகளைப் பயன்படுத்தி பாடல் எழுதியவர். குறிப்பாக பொன்மாலை, அந்திமழை, தாவணி விசிறிகள், தீயின் தாகம், ஆனந்த தாகம், ராஜ மேகங்கள், அழகான ராட்சசி, 50 கே.ஜி. தாஜ்மஹால், அமுதகானம், பன்னீர் மேகம், ஒளிமகள், இளஞ்சிரிப்பு, பூக்களின் மாநாடு, ரோஜாத் தீவுகள், பொன் வானம், ஜீவசொந்தம், சேலைப் பூக்கள, ஆசை நதி, பூவுக்குள் பூகம்பம், இதயம் கருகும் ஒரு வாசனை என பலவற்றைக் குறிப்பிடலாம்.

தஞ்சாவூரு மண்ணு எடுத்து பாடல்: இவர் எழுதிய தஞ்சாவூரு மண்ணு எடுத்து பாடல் சிங்கப்பூர் அதிபராயிருந்த தமிழ்நாட்டினை பூர்வீகமாகக் கொண்ட எஸ்.ஆர்.நாதனுக்கு மிகவும் பிடித்த பாடல். அவர் மறைவின்போது உலகத் தலைவர்கள் ஒன்றுகூடியிருந்த அரங்கில் எஸ்.ஆர். நாதன் உடல் வைக்கப்பட்டு அந்தப் பாடலை முழுதும் ஒலிபரப்பி அஞ்சலி செய்தது சிங்கப்பூர் அரசாங்கம். இந்த காணொலி இன்றைக்கும் இணையத்தில் உலா வருகின்றது.
பாடத்திட்டத்தில் வைரமுத்து: கவிஞர் வைரமுத்துவின் பல கவிதைகள் தமிழ்நாடு பாடநூல் மட்டும் இல்லாமல் பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பாடங்களாக இடம் பெறும் அளவிற்கு கருத்து செறிந்ததாக உள்ளது. இது மட்டும் இல்லாமல், சிங்கப்பூர் அரசின் கல்வித் திட்டத்தில் கவிஞர் வைரமுத்துவின் மரங்களைப் பாடுவேன் என்ற கவிதை தமிழ் பாடமாக இடம் பெற்றுள்ளது. இவர் எழுதிய 'சின்னச் சின்ன ஆசை' பாடல் எங்கள் மலையாள மண்ணில் இன்றைக்கும் ஒரு தாலாட்டாகவே ஒலித்துக்கொண்டிருக்கிறது எனவும் அதில் இடம் பெற்றுள்ள வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை என்ற வரி கற்பனையின் உச்சமாகும் என்றும் ஞானபீட விருது பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் வைரமுத்துவை பல இடங்களில் பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications











