Miss World 2021: 70வது உலக அழகி போட்டி.. மகுடம் சூடினார் போலந்தை சேர்ந்த கரோலினா பைலாவ்ஸ்கா!
சென்னை: கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய உலக அழகிப் போட்டி ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது நடைபெற்றுள்ளது.
70வது உலக அழகிப் போட்டி நிகழ்ச்சியில் போலந்து நாட்டை சேர்ந்த கரோலினா பைலாவ்ஸ்கா என்பவர் மகுடத்தை சூடினார்.
போர்ட்டோ ரிகாவின் சான் ஜுவான் எனும் இடத்தில் உள்ள கோகோ கோலா மியூசிக் ஹாலில் இந்த அழகிப் போட்டி கோலாகலமாக நடைபெற்றது.

கொரோனாவால் தாமதம்
கடந்த ஆண்டு டிசம்பர் 16ம் தேதி நடைபெற விருந்த உலக அழகிப் போட்டி 2021 கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், சற்றுமுன் உலக அழகிப் போட்டி போர்ட்டோ ரிகாவில் கோலாகலமாக நடைபெற்றது. பல நாடுகளை சேர்ந்த அழகிகள் இந்த போட்டியில் பங்கேற்று இருந்தனர்.

மகுடம் யாருக்கு
உலக அழகிப் போட்டி 2021 பட்டத்தை போலந்து நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி கரோலினா பைலாவ்ஸ்கா என்பவர் தட்டிச் சென்றார். அமெரிக்கா, இந்தோனேசியா, மெக்ஸிகோ, வட அயர்லாந்து மற்றும் கோட்டே டி ஐவரி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அழகிகளை பின்னுக்குத் தள்ளி மகுடம் சூடியுள்ளார்.

இந்திய-அமெரிக்க பெண்
அமெரிக்கா சார்பாக இந்த உலக அழகிப் போட்டியில் பங்கேற்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்ரீசைனி முதல் ரன்னர் அப்பாக தேர்வானார். மாடல் அழகி ஸ்ரீசைனிக்கு இந்திய ரசிகர்களும், அமெரிக்க ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்
இந்தியா சார்பாக உலக அழகிப் போட்டியில் கலந்து கொண்ட ஃபெமினா மிஸ் இந்தியா 2020 பட்டத்தை வென்ற மானசா வாரணாசி இந்த போட்டியில் 13வது இடத்தை பெற்றார். முதல் 6 இடங்களுக்குள் கூட வரமுடியாமல் அவர் தோல்வியை தழுவியது இந்திய ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

குவிகிறது வாழ்த்து
புதிய உலக அழகியாக தேர்வாகி உள்ள போலந்து நாட்டை சேர்ந்த கரோலினா பைலாவ்ஸ்காவிற்கு சர்வதேச ரசிகர்களும் பிரபலங்களும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். உலக அழகிப் போட்டி 2022 இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











