நாகர்கோவில்: ஆபாச சிடிக்கள் பிடிபட்டன-வாலிபர் கைது
நாகர்கோவில்: நாகர்கோவிலில் சிடி கடைகளில் ரகசிய அறைகள் அமைத்து ஆபாச மற்றும் புதுப்படி சிடிக்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது.
இதையடு்த்து வடசேரி பகுதியில் உள்ள சில சிடி கடைகளில் போலீசார் சோதனை நடத்தினர்.
இதில் பாலமோர் ரோட்டில் உள்ள சிடி கடைகளில் 140 ஆபாச சிடிக்கள் உள்பட மொத்தம் 725 சிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடை உரிமையாளர் வண்டிகுடியிருப்பு பகுதியை சேர்ந்த சுயம்பு என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட சிடிக்களில் சமீபத்தில் வெளிவந்த சிங்கம், சுறா உள்ளிட்ட பல்வேறு புதிய படங்களின் சிடிக்களும், காபி ரைட் இல்லாமல் விற்கப்பட்ட சிடிக்களும் அடக்கம்.
பிடிபட்ட ஆபாச சிடிக்களில் பிரபல தமிழ் நடிகைகளின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருந்தன.
ரூ.1 லட்சம் லாட்டரிகள் பறிமுதல்:
அதே போல களியாக்கவிளையில் ரூ.1 லட்சம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகளுடன் நின்று கொண்டிருந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் லாட்டரி சீ்ட்டு விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் கேரளா எல்லையில் உள்ள குமரி மாவட்டத்தில் திருட்டு தனமாக லாட்டரி விற்பனை நடக்கிறது.
களியாக்கவிளை ஒட்டியுள்ள கேரள பகுதிகளில் லாட்டரி சீட்டு கடைகளில் இருநது மொத்தமாக லாட்டரி சீ்ட்டுகளை வாங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந் நிலையில் களியாக்கவிளை போலீசார் களியாக்கவிளை பஸ் நிலைய பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திடமான நிலையில் நின்று கொண்டிருந்த ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் வைத்திருந்த பையை சோதனை போட்டபோது அதில் கேரளா, மணிப்பூர், மிசோரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுமார் 1 லட்சம் மதிப்பிலான 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாட்டரி சீட்டுகள் இருந்தன. விசாரணையில் அவர் குளச்சல் பகுதியை சேர்ந்த உமர் பரூக் என்று தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.


Click it and Unblock the Notifications