அத்திவரதர் வைபவம்: செய்தியாளர்களை தாக்கிய போலீஸ் மன்னிப்பு கேட்கணும் - டியூஜெ வலியுறுத்தல்
அத்திவரதர் வைபவத்தில் செய்தியாளர்களை தாக்கிய காவல்துறையினர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிடில் தமிழ்நாடு முழுவதும் டி.யூ.ஜே சார்பில் காவல்துறையினர்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும்
சென்னை: அத்திவரதர் வைபவத்தை படம் பிடித்த செய்தியாளர்களை தாக்கிய காவல்துறையினருக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்களை தாக்கிய காவல்துறையினர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிடில் தமிழ்நாடு முழுவதும் டி.யூ.ஜே சார்பில் காவல்துறையினர்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மாநில தலைவர் சுபாஷ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக டியூஜெ மாநிலத்தலைவர் சுபாஷ் வெளியிட்ட அறிக்கை.

கடந்த 47 தினங்களாக அத்தி வரதர் வைபவம் காஞ்சி மாநகரில் மாவட்ட நிர்வாகத்தின் துணையுடன் மிக சிறப்பாக நடைபெற்றது. அனைவரும் ஒத்துழைப்பு அளித்துவந்த நிலையில் வெளி மாவட்டத்தை சேர்ந்த ஒரு சில காவலர்களின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக இருந்தது.
MAN HANDLING எனப்படும் முறையை கையாண்டார்கள். இதில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். செய்தியாளர்கள் அதிக பேர் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று மாலை, வசந்த மண்டபம் அருகே ஜெயா தொலைக்காட்சியின் செய்தியாளர் ராஜேஷ் செய்தி சேகரித்துக் கொண்டிருந்தார். அவரை ஒரு காவலர் கட்டாயபடுத்தி வெளியேற்றினார். செய்தி எடுக்க வேண்டும் என வேண்டியும் அதைப்பற்றி கவலைப்படாத அந்த காவலர் மீண்டும் பிடிவாதமாக அவரை வெளியே தள்ளினார்.
இந்த வாக்குவாதத்தை கவனித்த ஒரு காவல் கண்காணிப்பாளர், என்ன ஏது என்று கேட்காமலேயே செய்தியாளர் ராஜேஷ் அவர்களை பிடித்து தள்ளியதில் அவருடன் இருந்த ஆயுதப்படை காவலர்கள் அவரை மேலும் இழுத்தனர். இதை பதிவு செய்ய கேமரா மேன் முயற்சித்தார் அதை கண்டு மேலும் கோபமுற்ற காவல் கண்காணிப்பாளர், இவரைத் தள்ளிவிட்டதால் 3 லட்சம் மதிப்புள்ள கேமராவின் எல் இ டி எனப்படும் டிஸ்பிளே உடைந்து விட்டது. இந்த செயல் மிகவும் அநாகரிகமான செயல். இதை தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
சம்பந்தப்பட்ட காவல்துறையினர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி இல்லாவிடில் தமிழ்நாடு முழுவதும் டி.யூ.ஜே சார்பில் காட்டுமிராண்டிகள் போல் நடந்து கொண்ட காவல்துறையினர்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
மேலும் சம்மந்தப்பட்ட காவல்துறையினர்கள் மீது காவல்துறை உயர் அதிகாரிகளும், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.யூ.ஜே சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
47 நாட்களாக நடைபெற்று வந்த இந்த வரலாற்று சிறப்புமிக்க அத்திவரதர் வைபவத்தில், இரவு பகலாக செயல்பட்டவர்களில் பத்திரிகையாளர்களும் மிகவும் முக்கியமானவர்கள்தான் என்பதை தமிழக அரசு உணர்ந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.


Click it and Unblock the Notifications











