இறந்து விட்டதாக மலிவான விளம்பரம்..5 ஆண்டு சிறை தண்டனைக்கு வாய்ப்பு.. வசமாக சிக்கிய பூனம் பாண்டே!
மும்பை: பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையும், சோஷியல் மீடியாவில் பிரபலமான நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால், தான் உயிருடன் இருப்பதாகவும், கர்ப்பப்பை புற்று குறித்த விழிப்பணர்வுக்காக அப்படி விளம்பரம் செய்ததாகவும் அவர் கூறி இருந்தார். இதனால்,பலர் மன அழுத்தத்திற்கு உள்ளான நிலையில், சோஷியல் மீடியாவில் பொய்யான தகவலை பரப்பி குற்றத்திற்காக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாலிவுட் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை பூனம் பாண்டே. ஏராளமான ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றுள்ளார். சோஷியல் மீடியாவில் எப்போதும் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் இவர் குறித்து, இன்ஸ்டாகிராமில் அதிர்ச்சியான செய்தி ஒன்று பரவியது.

அதில், இன்று காலை எங்களுக்கு கஷ்டமான நாளாக அமைந்துவிட்டது. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் எங்கள் அன்புக்குரிய பூனத்தை இழந்துவிட்டோம் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் என பதிவிடப்பட்டிருந்தது. பூனம் பாண்டேவின் மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி, திரைப்பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் இரங்கல் தெரிவித்தனர்.
உயிருடன் தான் இருக்கிறேன்: பூனம்பாண்டேவின் மரணச் செய்தி இணையத்தில் தீயாக பரவிய நிலையில், பூனம் பாண்டே தனது இன்ஸ்டாகிராமில், கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் நான் உயிரிழக்கவில்லை. நான் உயிருடன் தான் இருக்கிறேன். ஏராளமான பெண்கள் துரதிஷ்டவசமாக கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் உயிரிழக்கிறார்கள். இது முற்றிலும் தடுக்கப்படக்கூடிய ஒரு நோய். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக செய்யப்பட்ட விழிப்புணர்வு விளம்பரம் என கூறியிருந்தார். விளம்பரத்திற்காக இப்படியா என பலர் அவரை வறுத்து எடுத்தனர்.
வழக்குப்பதிவு: மராட்டிய சட்டமன்ற மேலவை உறுப்பினர் சத்யஜீத் தாம்பே, பூனம் பாண்டே மீது வழக்குப்பதிவு செய்து சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். விளம்பரத்துக்காக இதுபோன்று நடந்துகொள்பவர்களுக்கு சரியான பாடம் கற்பிப்பது போல சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதே போல பலர் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
மூன்று ஆண்டு சிறைக்கு வாய்ப்பு: இதையடுத்து, பூனம் பாண்டேவுக்கு எதிராக கொல்கத்தாவை சேர்ந்த அமித் ராய் என்பவர் தனது வக்கீல் ஷயான் சச்சின் பாசு என்பவர் மூலம் பூனம் பாண்டேவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். பொதுமக்கள் இடையே தேவையற்ற பீதியையும், மன உளைச்சலையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி இருப்பதாக அதில் குறிப்பிட்டுள்ளார். தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 67-ன் கீழ் மூன்று ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.


Click it and Unblock the Notifications











