மூன்று பேரை பலிகொண்ட இந்தியன் 2.. லைகா நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்தது போலீஸ்!
Recommended Video
சென்னை: இந்தியன் 2 படப்பிடிப்பில் மூன்று பேர் பலியான நிலையில் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் பிரமாண்ட படம்த இந்தியன்-2. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் இரவு மிக உயரமான ராட்சத கிரேனில் மின்விளக்குகளை பொருத்தி காட்சிகள் படமாக்கப்பட்டது.
அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் சரிந்து விழுந்தது.

சிகிச்சை
இந்த விபத்தில் உதவி இயக்குனர் கிருஷ்ணா, கலை உதவி இயக்குனர் சந்திரன், உதவியாளர் மது ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நிதியுதவி
இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த இந்த விபத்து ஒட்டு மொத்த திரைத்துறையையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நடிகர் கமல்ஹாசன் ஒரு கோடி நிதியுதவியும், லைகா நிறுவனம் சார்பில் 2 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லைகா மீது வழக்கு
இந்நிலையில் கிரேன் ஆபரேட்டர் மீது போலீசார் விபத்து நடந்த உடனேயே வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் இந்தியன்-2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் மீதும், தயாரிப்பு நிர்வாகி மீதும் 4 பிரிவுகளின் கீழ் நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இணை இயக்குநர் புகார்
இதேபோல் கிரேன் உரிமையாளர், புரொடக்ஷன் மேனேஜர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இணை இயக்குனர் குமார் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் லைகா நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











