கிரகலட்சுமி புகார்: பிரஷாந்த் மீது வழக்குப் பதிவு
சென்னை:
நடிகர் பிரஷாந்த்தின் மனைவி கிரகலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில், பிரஷாந்த், அவரது தந்தை தியாகராஜன் உள்ளிட்ட 4 பேர் மீது மாம்பலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நடிகர் பிரஷாந்த், தந்தை தியாகராஜன், தாயார் மற்றும் தங்கை ப்ரீத்தி ஆகியோர் மீது கிரகலட்சுமி புகார் கொடுத்திருந்தார். தன்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக அவர் கூறியிருந்தார்.
ஆனால் இந்தப் புகார் மீது போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனர். இதையடுத்து உயர்நீதிமன்றத்தை அணுகிய கிரகலட்சுமி, பிரஷாந்த் உள்ளிடடோர் மீது வழக்குப் பதவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிடுமாறு கோரி மனு செய்தார்.
இதையடுத்து இந்தப் புகார் மீது விசாரணை நடத்துமாறு மாம்பலம் காவல் போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் இந்த புகாரை வரதட்சணைப் பிரிவு உதவி ஆணையர் விசாரிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.
நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, நடிகர் பிரஷாந்த் குடும்பத்தினர் 4 பேர் மீதும் வரதட்சணை கொடுமை வழக்கு பதிவு செய்தார்.
இதையடுத்து பிரஷாந்த் உள்ளிட்ட நான்கு பேரிடமும் போலீஸார் விசாரணை நடத்தவுள்ளனர். இதைத் தொடர்ந்து பிரஷாந்த் உள்ளிட்ட நான்கு பேரும் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தை அணுகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications