பட்டியலினத்தவர் குறித்து அவதூறு கருத்து… போலீஸார் பிடிவாரண்ட்… தலைமறைவான மீரா மிதுன்…
சென்னை: நடிகை மீரா மிதுன் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்தக் கூட்டம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் ரொம்பவே பிரபலமானார்.
இவர் சமீபத்தில் பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறான கருத்துகளைக் கூறி சர்ச்சையில் சிக்கினார்.

8 தோட்டாக்களில் அறிமுகம்
மாடலிங் மூலம் தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்த மீரா மிதுன், ஸ்ரீ கணேஷ் இயக்கிய '8 தோட்டாக்கள்' திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்த 'தானா சேர்ந்தக் கூட்டம்' படத்திலும் நடித்திருந்த மீரா மிதுன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலம் ரொம்பவே பிரபலமானார். அதேவேகத்தில் தேவையில்லாமல் வாய்க்குவந்தபடி பேசி சர்ச்சைகளிலும் சிக்கினார்.

பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறு
நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல் தேவையில்லாமல் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டினார் மீரா மிதுன். திரைத் துறையில் பட்டியலின, பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் பெற்றுள்ள முன்னேற்றம் குறித்து, சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வீடியோ வெளியிட்டார் மீரா மிதுன். இதனால் அவர் மீதும், இதற்கு உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.

பிடிவாரண்டு பிறப்பித்த நீதிமன்றம்
இதனையடுத்து, அந்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறை, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தது. பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றனர். மேலும், இந்த வழக்கில் இருவர் மீதும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், ஆகஸ்ட் 6ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ஷாம் அபிஷேக் மட்டுமே ஆஜாரானார். முக்கிய குற்றவாளியான மீரா மீதுன் ஆஜராகவில்லை. எனவே அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாதபடி கைது வாரண்ட் பிறப்பித்தது நீதிமன்றம்.

தலைமறைவான மீரா மிதுன்
இந்த நிலையில், இந்த வழக்கு மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த முறையும் மீரா மிதுனின் நண்பர் ஷாம் அபிஷேக் மட்டுமே ஆஜரானர். அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்கறிஞர் சுதாகர், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள மீரா மீதுன் தலைமறைவாக உள்ளதாகவும், விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் என்றும் தெரிவித்தார். இதனையடுத்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஸ்ரீதேவி உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications











