சேலத்தில் 3000 தலைவா பட டிவிடிக்கள் பறிமுதல் - மூவர் கைது!

இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நடிகர் விஜய், நடிகை அமலபால், சத்யராஜ் நடித்து இயக்குநர் விஜய் இயக்கியுள்ள தலைவா படம் இன்னும் தமிழ்நாட்டில் ரிலீசாகவில்லை. ஆனால் கேரளா, கர்நாடகா மற்றும் மும்பை உள்ளிட்ட பகுதிகளில் வெளியாகியுள்ளது.
வெளிநாடுகளில் இந்தப் படம் வெளியான இரண்டாவது நாளே டொரன்ட் உள்ளிட்ட தளங்களில் இந்தப் படம் வெளியாகி பார்வையாளர்களுக்கு இலவசமாகக் கிடைத்தது.
இதனை டவுன்லோடு செய்து சிடியாக்கி சென்னை - புதுவை நகரங்களின் கடைகளில் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சேலம் புதிய பஸ் நிலையம் எதிரே தலைவா புதுப்பட டிவிடிக்கள் ரகசியமாக தயாரிக்கப்படுவதாக விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது. உடனே விஜய் ரசிகர்கள் அந்த வீடியோ சி.டி.க்கள் தயாரித்த கட்டிடம் முன்பு திரண்டு வந்து முற்றுகையிட்டனர்.
3 பேர் கைது
அப்போது அந்த வீட்டில் கம்ப்யூட்டர் மூலம் தலைவா டிவிடிகள் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து பேர்லேண்ட்ஸ் போலீசாருக்கு விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் புதுப்பட சி.டி.க்கள் தயாரித்த கடைக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது, நடிகர் விஜய் நடித்து இன்னும் வெளியாகாமல் உள்ள தலைவா படத்தை திருட்டுத்தனமாக சி.டி.க்களில் தயாரித்து கொண்டிருந்த கடையின் ஊழியர்கள் சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த அருள்பிரபு (36), தர்மபுரியை சேர்ந்த முரளி (28), குமார் (27) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், சி.டி. தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர்கள் மற்றும் தலைவா, பட்டத்துயானை, மரியான் உள்ளிட்ட 3000க்கும் மேற்பட்ட புதுப்பட சி.டி.க்கள் மற்றும் கவர்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Click it and Unblock the Notifications











