Isaivaani issue: இசைவாணி விவகாரத்தில் இதுதான் நடக்குது.. குற்றம் சாட்டிய திருமாவளவன்!
சென்னை: ஐயப்பன் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பாடலை பாடி வெளியிட்டதாக கானா பாடகி இசைவாணி மீது அடுத்தடுத்து புகார்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக பாஜக நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.
ஐ அம் சாரி ஐயப்பா, உள்ளே வந்தால் என்னப்பா என்னும் அந்தப் பாடலை இசைவாணி பாடியிருந்தார். இந்தப் பாடலுக்கு ஐயப்ப பக்தர்கள் கடும எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் பா ரஞ்சித் மற்றும் இசை வாணிக்கு எதிராக தமிழக காவல்நிலையங்களில் புகார்களும் கொடுக்கப்பட்டு வருகின்றன.

இசைவாணி விவகாரம்: ஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்படும் நிலையில், சமீபத்தில் ஐ அம் சாரி ஐயப்பா, நான் உள்ளே வந்தால் என்னப்பா என்று பாடலை பாடி கானா பாடகி இசைவாணி வெளியிட்டிருந்தார். இந்தப் பாடலுக்கு ஐயப்ப பக்தர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா ரஞ்சித் மற்றும் இசைவாணிக்கு எதிராக பல காவல்நிலையங்களில் புகார்கள் கொடுத்து வருகின்றனர். பாஜகவினரும் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை வேண்டும் என்றும் இல்லையென்றால் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
திருமாவளவன் ஆதரவு: இதனிடையே இந்த விவகாரம் குறித்து பல அரசியல் தலைவர்களும் பேசி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பேசிய அமைச்சர் சேகர்பாபு, மதத்தால் இனத்தால் மக்களை பிளவுப்படுத்தும் சக்திகள் இந்த ஆட்சியில் தலைதூக்க முடியாது என்று உறுதிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள விசிக தலைவர் திருமாவளவன் மதத்தையோ இனத்தையோ பிளவுப்படுத்தும் நோக்கத்தில் இசைவாணி இந்தப்பாடலை பாடவில்லை என்று உறுதிப்பட தெரிவித்துள்ளார். மேலும் அதானி விவகாரத்தை திசை திருப்பவே இசைவாணி பிரச்சினை பெரிதுப்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.
பெண்ணியத்தின் குரல்: இசைவாணியை கைது செய்ய வேண்டும் என்று கூறுவது கண்டனத்திற்கு உரியது என்றும் திருமாவளவன் கூறியுள்ளார். சபரிமலையில் பெண்கள் நுழையக்கூடாது என்ற பிரச்சினை சர்ச்சையானபோது பெண்ணியத்தின் குரலாக, பெரியாரின் குரலாக இசைவாணி இந்தப் பாடலை பாடியதாகவும் அவர் இசைவாணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதானியின் கைது குறித்து தேசிய அளவிலான கோரிக்கைகள் வலுத்துவரும் நிலையில், இசைவாணியின் பாடல் போனற்வற்றை கையில் எடுப்பதாகவும் திருமாவளவன் கூறியுள்ளார்.
இசைவாணிக்கு எதிர்ப்பு: மார்கழியில் மக்களிசையில் பாடியதன்மூலம் பிரபலமான இசைவாணி, கடந்த 2018ம் ஆண்டில் ஐ அம் சாரி ஐயப்பா பாடலை பாடியிருந்தார். இந்த வீடியோ பாடல் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இசைவாணிக்கு எதிரான விமர்சனங்கள் எழுந்தன. அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன. இதனிடையே பெண்களின் உரிமைகள் குறித்தே இந்த பாடல் அமைந்துள்ளதாகவும் 6 ஆண்டுகள் கழித்து இந்தப் பாடல் தற்போது பிரச்சினையாக மாற்றப்பட காரணம் என்ன என்றும் பலரும் கேட்டு வருகின்றனர். இதற்கு பதிலளிக்கும் வகையில் திருமாவளவனின் பேச்சு அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











