ரசிகர்களுடன் பொன்னியின் செல்வன் 2 பார்த்த ஆதித்த கரிகாலன்... செல்ஃபியில் திணறிய விக்ரம்
சென்னை: அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக இயக்கியுள்ளார் மணிரத்னம்.
இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு வெளியானது.
அதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகமும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தை சீயான் விக்ரம் ரசிகர்களுடன் பார்த்து ரசித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

ரசிகர்களுடன் சீயான் விக்ரம்:பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கிய இந்தப் படம் தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படத்திற்காக கொஞ்சம் மாற்றங்களுடன் இயக்கியுள்ளார் மணிரத்னம்.
பொன்னியின் செல்வன் முதல் பாகம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றதால், இரண்டாம் பாகம் குறித்தும் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. அதன்படி இன்று வெளியான பொன்னியின் செல்வன் 2 ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே இந்தப் படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் பொன்னியின் செல்வன் டீம் ரவுண்டு அடித்து வந்தது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, மணிரத்னம், ஏஆர் ரஹ்மான் ஆகியோர் ரசிகர்களை நேரில் சந்தித்தனர். தற்போது இன்னும் சர்ப்ரைஸ்ஸாக ரசிகர்களுடன் சேர்ந்து பொன்னியின் செல்வன் படம் பார்த்துள்ளார் விக்ரம். பொன்னியின் செல்வன் 2 ப்ரொமோஷன்களில் தங்கலான் கெட்டப்பில் பங்கேற்று வந்தார் விக்ரம். செம்ம ஸ்டைலிஷாக மாஸ் காட்டிய விக்ரம், இப்போதும் அதே எனர்ஜியை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார்.
சென்னை வடபழனியில் உள்ள பளாஸோ திரையரங்கில் பொன்னியின் செல்வன் 2 திரையிடப்பட்டுள்ளது. அங்கு ரசிகர்களுடன் படம் பார்த்த விக்ரம், அவர்களுடன் செல்ஃபியும் எடுத்துக்கொண்டார். திரையில் ஆதித்த கரிகாலனாக மிரட்டிய விக்ரமை தியேட்டரில் பார்த்த ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். மேலும் அவருடன் வளைத்து வளைத்து செல்ஃபி எடுத்தது டிவிட்டரில் வைரலாகி வருகிறது.

சீயான் விக்ரம் உடன் நடிகர் ஜெயராமும் பொன்னியின் செல்வன் 2 படத்தை ரசிகர்களுடன் பார்த்து ரசித்தார். ஆழ்வார்கடியான் கேரக்டரில் நடித்துள்ள ஜெயராம் உடனும் ரசிகர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். இதனால் சில மணி நேரங்களுக்கு பளாஸோ திரையரங்கில் பரபரப்பு காணப்பட்டது. முன்னதாக நடிகர் விக்ரமின் நடிப்பை ரசிகர்கள் வெகுவாக பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
விக்ரமுக்கும் பார்த்திபேந்திர பல்லவன் கேரக்டரில் நடித்துள்ள விக்ரம் பிரபுவுக்கும் இடையேயான காட்சி, கடம்பூர் கோட்டையில் விக்ரம் என்ட்ரியாகும் காட்சி, தம்பி ஜெயம் ரவி, தங்கை த்ரிஷா ஆகியோரை சந்திக்கும் எமோஷனலான காட்சி, ஐஸ்வர்யா ராய்யை நேருக்கு நேராக சந்திக்கும் காட்சிகளில் விக்ரம் வேற லெவலில் நடிப்பால் மிரட்டியுள்ளார் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











