மார்ச் 29ம் தேதி பிரம்மாண்டமான ஆடியோ லாஞ்சிற்கு திட்டமிடும் பொன்னியின் செல்வன் 2 டீம்?
சென்னை : மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி வசூல்மழை பொழிந்தது பொன்னியின் செல்வன் படம்.
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மையமாக கொண்டு வெளியான இந்தப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
படத்தின் இரண்டாவது பாகத்திற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுவரும் சூழலில் வரும் ஏப்ரல் மாதத்தில் படத்தின் இரண்டாவது பாகம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் படம்
நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், பார்த்திபன், ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது பொன்னியின் செல்வன். அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் வரலாற்று நாவலை மையமாக கொண்டு இந்தப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.

இயக்குநர் மணிரத்னம்
மணிரத்னம் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவான இந்தப் படம் விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் சிறப்பான வரவேற்பை பெற்றது. முதல் பாகத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே படம் இரண்டு பாகங்களாக ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இரண்டு பாகங்களையும் சேர்த்தே சூட்டிங்கை மணிரத்னம் நடத்தி முடித்திருந்தார்.

ஏப்ரல் இறுதியில் ரிலீஸ்
இந்நிலையில் வரும் ஏப்ரல் 28ம் தேதி படத்தின் இரண்டாவது பாகம் ரிலீசாகவுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தை போலவே இந்தப் படமும் பான் இந்தியா படமாக ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் முதல் பாடல் இந்த மாதத்தின் இறுதியில் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மார்ச் 29ம் தேதி ஆடியோ ரிலீஸ்?
படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ஏஆர் ரஹ்மான் குரலில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே, முந்தைய பாகத்தை போலவே பொன்னியின் செல்வன் 2 படத்தின் ஆடியோ வெளியீடும் மிகவும் பிரம்மாண்டமான அளவில் வரும் மார்ச் மாதம் 29ம் தேதி நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மார்ச் மத்தியில் பிரமோஷன்?
படத்தின் பிரமோஷன்கள் அடுத்த மாதத்தின் மத்தியில் துவங்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் பாகத்தை போலவே இந்த பாகத்திற்கும் படத்தின் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பங்கேற்கும் ப்ரமோஷனல் டூர் நடைபெறவுள்ளதாகவும் படக்குழு சார்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றிக்கு உதவிய பிரமோஷன்ஸ்
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் ப்ரமோஷனல் டூர் ஓரு மாத அளவில் நடைபெற்றது. சென்னையில் துவங்கிய இந்த டூர், மும்பை, டெல்லி என நீண்டது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஏஆர் ரஹ்மான் உள்ளிட்டவர்களும் இந்த டூரில் பங்கேற்றனர். மிகவும் சிறப்பான வகையில் இந்த ப்ரமோஷனல் டூர், படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.


Click it and Unblock the Notifications











