பொன்னியின் செல்வன் படத்தை பாகுபலியுடன் ஒப்பிடவேண்டாம்.. ரகசியத்தை உடைத்த விக்ரம் பிரபு!
சென்னை : பொன்னியின் செல்வன் படத்தை பாகுபலி படத்துடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம் என நடிகர் விக்ரம் பிரபு தெரிவித்துள்ளார்.
பொன்னியின் செல்வன் திரைப்படம் தடபுடலாக வெளியீட்டுக்கு தயாராகிவிட்டது. இந்த மாத இறுதியில் திரைக்கு வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பலமொழிகளில் பான் இந்தியா படமாக கலக்க வருகிறது.
ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என நட்சத்திரங்கள் பலரும் நடித்துள்ள இந்த படம் சோழ வம்ச வரலாறு பொன்னியின் செல்வன் நாவலை தழுவி உருவானதாகும்.

சோழ வம்ச வரலாறு
வரலாற்று சிறப்பு மிக்க பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்திய தேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஷ்வர்யா ராய், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பொன்னியின் செல்வன் படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

குதிரையிலிருந்து விழுந்தேன்
பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகர் நடிகைகளின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில், கார்த்தி,ஜெயம்ரவி, த்ரிஷா, விக்ரம் பிரபு கலந்து கொண்டு பேசினர். அப்போது பேசிய கார்த்தி, பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியதேவனாக நடித்துள்ளேன், முதல் காட்சியே மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. அதுமட்டும் இல்லாமல் பல முறை குதிரையில் இருந்து விழுந்து இருக்கிறேன். குதிரையுடன் நாம் பேசி பழகினால்தான், அது தள்ளிவிடாது என்பதால், எப்போதும் குதிரையுடன் பேசிக்கொண்டே இருந்தேன் என்றார்.

பாகுபலி மாதிரி இருக்குமா?
இதையடுத்து,செய்தியாளர் ஒருவர் பொன்னியின் செல்வன் படம் பாகுபலி படம் மாதிரி இருக்குமா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த விக்ரம் பிரபு, இந்த படம் பாகுபலி மாதிரி இருக்குமா, பத்மாவதி படம் மாதிரி இருக்குமானு கேக்குறாங்க இந்த படம் பொன்னியின் செல்வன் மாதிரி இருக்கும். பாகுபலி பிக்ஷன் திரைப்படம் ஆனால், பொன்னியின் செல்வன் ஒரு வரலாற்று திரைப்படம் இது முற்றிலும் வித்தியாசமானது.

ஒப்பிட வேண்டாம்
பாகுபலி, பத்மாவதி படங்களிலிருந்து இந்த படம் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும். இதனால், பாகுபலி படத்துடன் பொன்னியின் செல்வன் படத்தை ஒப்பிட்டு பார்க்க வேண்டாம். என்னை பொருத்த வரை ஒவ்வொரு படத்திலும், ஒவ்வொரு வித்தியாசம் இருக்கும் படத்தை பார்த்துவிட்டு மக்கள் எவ்வளவு ஆதரவு அளிக்கிறார்களோ அந்த அளவுக்கு இந்த படம் வெற்றி பெறும் என்றார்.


Click it and Unblock the Notifications











