வெளியானது பொன்னியின் செல்வன் படத்தின் க்ளிம்ப்ஸ்.. ரசிகர்கள் கொண்டாட்டம்
சென்னை: பொன்னியின் செல்வன் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை லைகா நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
தமிழ் இலக்கியத்தில் மணிமகுடமாக கருதப்படுவது பொன்னியின் செல்வன். பத்திரிகையாளரும், எழுத்தாளருமான கல்கி எழுதிய அந்த நாவல் உண்மை சம்பவங்களையும், புதினத்தையும் கலந்து எழுதப்பட்டது. 50 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டதாக இருந்தாலும் இன்றைய தலைமுறைவரை வாசிக்கப்படும் நாவலாக அது இருக்கிறது.

பொன்னியின் செல்வனை திரைப்படமாக்க முயற்சி
இப்படி சிறப்புகளை உடைய பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்க முதல்முதலாக எம்ஜிஆர் முயன்றார். அதற்காக திரைக்கதை எழுதும் பொறுப்பு இயக்குநர் மகேந்திரனிடம் வழங்கப்பட்டது. ஆனால் படமாக்கும் திட்டம் பாதியில் கைவிடப்பட்டது. அதன் பிறகு கமல் ஹாசனை அந்த முயற்சியை கையில் எடுத்தார். அந்த முயற்சியும் நிறைவேறாமல் போனது.

சாத்தியமாக்கிய மணிரத்னம்
இதனையடுத்து பொன்னியின் செல்வன் நாவல் எப்போது திரைப்படமாகும்; அதனை யார் சாத்தியமாக்குவார் என்ற கேள்வி பல வருடங்களாக தமிழ் திரைப்பட ரசிகர்களிடையே ஓடிக்கொண்டிருந்தது. சூழல் இப்படி இருக்க இந்த முயற்சியை மணிரத்னம் கையில் எடுத்தார். அவருக்கு துணையாக லைகா நிறுவனமும் களமிறங்கியது.

பொன்னியின் செல்வன் பாகம் 1,2
இதனையடுத்து பொன்னியின் செல்வன் திரைப்படம் ஆரம்பித்தது. இதில் ஜெயம் ரவி, விக்ரம், பிரகாஷ் ராஜ், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்போடு வெளியான இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. படம் 500 கோடி ரூபாய் வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. படத்தின் இரண்டாம் பாகத்தின் வேலைகளும் முடிவடைந்துவிட்டதால் படம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தின் அசத்தல் க்ளிம்ப்ஸ்
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் பாகம் 1 மற்றும் 2 ஆகியவைகளின் க்ளிம்ப்ஸ் வீடியோவை லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் கார்த்தி, ஜெயராம், ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்டோர் இடம்பெற்றிருக்கின்றனர். மேலும் அந்த வீடியோவில் பொன்னியின் செல்வன் படம் குறித்து அவர்கள் பேசுவதுபோல் காட்சிகள் அமைந்திருக்கின்றன. தற்போது இந்த க்ளிம்ப்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











