Simbu - சிம்புவுக்கு ஜோடியாகும் விஜய் பட ஹீரோயின்?.. செம ஜோடியா இருக்குமே.. அப்டேட் எப்போ தெரியுமா?
சென்னை: தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48ஆவது படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் சிம்பு. தனது கரியரில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கும் அவர் ஃபுல் பார்மில் இருக்கிறார். மாநாடு, வெந்து தணிந்தது காடு என்று வரிசையாக அவர் ஹிட் படத்தை கொடுத்ததால் கண்டிப்பாக இந்தப் படமும் ஹிட்டாகும் என்று அவரது ரசிகர்கள் ஏகப்பட்ட நம்பிக்கையில் இருக்கிறார்கள். இந்த சூழலில் எஸ்டிஆர் 48 குறித்து புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது.
கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. நடிப்பு, இயக்கம், நடனம், பாடல் எழுதுவது, பாடல் பாடுவது என எந்த ஃப்ளாட்பார்மிலும் தனது தடத்தை ஆழமாக பதித்தவர். இடையில் சில காரணங்களால் சினிமாவில் கவனம் செலுத்த முடியாமல் தத்தளித்த சிம்பு ஒருகட்டத்தில் சுதாரித்துக்கொண்டு மீண்டும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அந்தவகையில் அவரது இரண்டாவது இன்னிங்ஸ் சிறப்பாகவே தொடங்கியது. ஈஸ்வரன் தோல்வியடைந்தாலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடித்த மாநாடு திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது.

வரிசையான ஹிட்: மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு கௌதம் மேனனுடன் இணைந்து வெந்து தணிந்தது காடு படத்தில் பணியாற்றினார். அந்தப் படமும் சூப்பர் ஹிட்டடித்தது. குறிப்பாக சிம்புவின் நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் எஸ்டிஆர் மீண்டும் ஃபார்முக்கு வந்துவிட்டதாக அவரது ரசிகர்கள் குதூகலித்தனர். அப்படிப்பட்ட சூழலில் பத்து தல படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் போதிய வரவேற்பை பெறவில்லை. இருந்தாலும் சிம்புவின் நடிப்பு மேற்கொண்டு மெருகேறியிருந்தது.
எஸ்டிஆர் 48: இந்த சூழலில் அவர் தனது 48ஆவது படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் படத்தை தயாரிக்க; கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி படத்தை இயக்குகிறார். முதல் படத்திலேயே தேசிங்கு பெரியசாமி கவனம் ஈர்த்தவர் என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.
ரஜினிக்கான கதை: அதுமட்டுமின்றி இந்தக் கதையை முதலில் தேசிங்கு ரஜினியிடம்தான் கூறினார். ஆனால் என்ன காரணத்தினாலோ அவர் விலகிவிட சிம்பு உள்ளே வந்தார். ஏற்கனவே பத்து தல படத்தையும் ரஜினியை வைத்து உருவாக்குவதற்கே முயற்சி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரஜினிக்கான கதை சிம்புவுக்கு வந்தாலும் இதில் பெரிய அளவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என தேசிங்கு பெரியசாமி தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது.
தீவிர பயிற்சியில் சிம்பு: இந்தப் படத்துக்காக சிம்பு மார்ஷியல் ஆர்ட்ஸ் உள்ளிட்ட பல கலைகளை தீவிரமாக பயின்றதாக கூறப்பட்டது. இதற்காக அவர் தாய்லாந்தும் சென்று வந்தார். இருந்தாலும் படத்தின் அறிவிப்பு வெளியானதோடு சரி அடுத்தக்கட்ட நகர்வுக்கு படம் செல்லவில்லை. இதனால் படம் டிராப்பாகிவிட்டதாக என்ற தகவல் ஒன்று கடந்த சில வாரங்களாகவே ஓடிக்கொண்டிருந்தது. இதனால் சிம்பு ரசிகர்கள் அச்சமடைந்தனர். ஆனால் படம் ட்ராப் ஆகவில்லை படத்தின் கிராஃபிக்ஸ் பணிகளுக்கான முதற்கட்ட வேலைகள் தொடங்கி நடந்துவருவதாகவும் கூறப்படுகிறது.
பூஜா ஹெக்டே ஹீரோயின்?: இந்நிலையில் எஸ்டிஆர் 48 குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்க பூஜா ஹெக்டே கமிட்டாகியிருப்பதாக சொல்லப்படுகிறது. அவர் ஏற்கனவே தமிழில் முகமூடி, பீஸ்ட் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இந்தத் தகவலை கேள்விப்பட்ட சிம்பு ரசிகர்கள், எஸ்டிஆருக்கும், பூஜா ஹெக்டேவுக்கும் கண்டிப்பாக ஜோடி பொருத்தம் அள்ளும் என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். இதற்கிடையே படத்திலிருந்து ஒரு அப்டேட் பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











