பூர்ணாவிடம் திருமணம் செய்வதாகப் பழகி மோசடிக்கு முயன்ற வழக்கு.. சிக்குகிறார் சினிமா தயாரிப்பாளர்?
கொச்சி: நடிகை பூர்ணா வழக்கில் சினிமா தயாரிப்பாளர் ஒருவரை போலீசார் இன்று விசாரிக்கின்றனர்.
Recommended Video
தமிழில், வேலூர் மாவட்டம், வித்தகன், தகராறு, சகலகலா வல்லவன், கொடிவீரன், சவரக்கத்தி உட்பட பல படங்களில் உட்பட சில படங்களில் நடித்தவர் பூர்ணா.
இவர் மலையாளத்தில், ஷாம்னா காசிம் என்ற தனது பெயரில் நடித்து வருகிறார்.

மிரட்டிய கும்பல்
பூர்ணாவின் அம்மா ரவ்லா, கேரளா மாநிலம் மராடு போலீஸ் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் புகார் அளித்தார். அதில், சிலர் தங்களிடம் பணம் கேட்பதாகவும் கொடுக்கவில்லை என்றால் அழித்துவிடுவதாக மிரட்டுவதாகவும் கூறியிருந்தார். இது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பூர்ணாவை மிரட்டிய கும்பலைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பழகி உள்ளனர்
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறும்போது, ரபீக் என்பவர் நடிகை பூர்ணாவை போனில் தொடர்பு கொண்டு, திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகக் கூறியுள்ளார். பின்னர் ரபீக்கும் பூர்ணா வீட்டினரும் பழகி உள்ளனர். இதற்கிடையே, கடந்த 3 ஆம் தேதி பூர்ணாவின் வீட்டுக்கு ரபீக் உட்பட 6 பேர் சென்றுள்ளனர். திருமணம் பற்றி பேசுவதுபோல அவரது வீடு, வாகனம் உள்ளிட்டவற்றை வீடியோ எடுத்து வந்துவிட்டனர்.

முக்கிய குற்றவாளி
கடந்த சில நாட்களுக்கு முன், நடிகையிடம் ஒரு லட்சம் ரூபாய் கேட்டுள்ளனர். இதனால் பூர்ணா குடும்பத்தினர் சந்தேகம் அடைந்தனர். அவர்கள் தொடர்ந்து பணம் கேட்டுபோலீசில் புகார் கொடுத்தார். வழக்குப் பதிவு செய்து திருச்சூரைச் சேர்ந்த ரபீக், சரத், அஸ்ரஃப் உட்பட சிலரை கைது செய்துள்ளோம்' என்றனர். பின்னர் முக்கிய குற்றவாளியான ஹேர் ஸ்டைலிஷ்ட் ஹாரிஸ் உட்பட கும்பலை சேர்ந்த அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

பாலியல் அத்துமீறல்
இந்நிலையில் குற்றவாளிகளின் புகைப்படங்கள் வெளியானதும் மேலும் 5 மாடல்கள், இந்தக் கும்பலிடம் ஏமாந்ததாகப் புகார் கூறினர். தனி அறையில் பூட்டி வைத்து நகைகள், பணத்தைப் பறித்துள்ளனர். பாலியல் அத்துமீறலிலும் ஈடுபட்டதாகக் கூறினர். மேலும் ஒரு நடிகையிடமும் இந்த கும்பல் மோசடியில் ஈடுபட முயன்றது சமீபத்தில் தெரியவந்தது. இந்த மோசடிக்குப் பின் சினிமாவை சேர்ந்தவர்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

சினிமா தயாரிப்பாளர்
இந்த வழக்கு தொடர்பாக மலையாள நடிகர் தர்மராஜனிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் இந்த வழக்கில் தயாரிப்பாளர் ஒருவரும் சிக்கியுள்ளார் என்று கூறப்படுகிறது. கடந்த மாதம் ஒரு நாள், தயாரிப்பாளர் ஒருவர் பூர்ணாவின் வீட்டுக்குச் சென்றுள்ளார். பூர்ணா வரச் சொல்லிதான் வந்தேன் என்று அவர், வீட்டில் தெரிவித்துள்ளார். ஆனால், பூர்ணா அவரை வீட்டுக்கு வரச் சொல்லவில்லை.

வீட்டுக்கு வந்தார்
பிறகு எதற்காக அந்த சினிமா தயாரிப்பாளர் நடிகை பூர்ணா வீட்டுக்கு வந்தார் என்பது மர்மமாக இருக்கிறது. அவருக்கும் அந்த மோசடி கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதுபற்றி போலீசார் அவரிடம் இன்று விசாரிக்க இருக்கின்றனர். அவரிடம் விசாரணை நடத்தினாலும் மேலும் சில தகவல்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதோடு இந்த வழக்கும் இன்னும் சிலர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











