நான் உயிரோடத்தான் இருக்கேன்.. ஏன் இப்படி கிளப்பி விட்டாங்கன்னு தெரியல.. நடிகை லக்ஷ்மி வருத்தம் !
சென்னை: பழம்பெரும் நடிகை லக்ஷ்மி உயிரிழந்து விட்டதாக வதந்தி ஒன்று தீயாக பரவி வரும் நிலையில், போனில் தொடர்பு கொண்டு கேட்டதற்கு தான் நலமாக உள்ளேன் என்றும் ஏன் இப்படி கிளப்பி விடுறாங்க என்றும் ரொம்பவே மனவருத்தத்துடன் விளக்கம் அளித்துள்ளார்.
1961ம் ஆண்டு சிவாஜி கணேசன், பத்மினி நடிப்பில் வெளியான ஸ்ரீவள்ளி திரைப்படத்தில் குழந்தை வள்ளியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லக்ஷ்மி.
மாட்டுக்கார வேலன், பெண் தெய்வம், குமரிக்கோட்டம், சம்சாரம் அது மின்சாரம், ஜீன்ஸ், உன்னைப்போல் ஒருவன் என பல படங்களில் நடித்துள்ளார் நடிகை லக்ஷ்மி.

லக்ஷ்மி மரண வதந்தி
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய நடிகையாக வலம் வரும் பழம்பெரும் நடிகை லக்ஷ்மி திடீரென காலமாகி விட்டதாக செய்திகள் சோஷியல் மீடியாவில் அதிகம் ஷேர் ஆகி வருகின்றன. ஏகப்பட்ட மீடியா நண்பர்களும் இது தொடர்பாக நடிகை லக்ஷ்மிக்கே போன் போட்டு அது முற்றிலும் வதந்தி என்பதை அறிந்து கொண்டனர்.

நான் இறக்கவில்லை
இந்த வதந்தி குறித்து நடிகை லக்ஷ்மியிடமே போன் செய்து விசாரித்த நிலையில், நான் ரொம்ப நல்லாவே இருக்கேன்ப்பா.. பிறந்து விட்டால் என்றாவது ஒரு நாள் இறக்கத்தான் வேண்டும். மரணத்திற்காக எல்லாம் நான் எப்போதும் பயந்தது கிடையாது. யாரு இப்படி வேலை வெட்டி இல்லாமல் இந்த வதந்தியை கிளப்பி விட்டது என தெரியவில்லை என்றார்.

நண்பர்களுக்கு நன்றி
எனக்கு ஏதோ ஆகிடுச்சுன்னு பதறி போய் போன் போட்டு காலையில் இருந்தே ஏகப்பட்ட மீடியா நண்பர்களும் திரையுலக நண்பர்களும் விசாரித்து வருகின்றனர். லக்ஷ்மி மீது அக்கறை கொண்டவர்களும் இங்கே நிறைய பேர் இருக்காங்க என்பதை நினைக்கும் போது ரொம்பவே மனசுக்கு சந்தோஷமாக இருக்கு என்றார்.

காய்கறி கடையில் இருக்கேன்
வரும் டிசம்பர் 13ம் தேதி வந்தால் நடிகை லக்ஷ்மிக்கு 70 வயது நிறைவடையும். அதற்குள் நடிகை லக்ஷ்மி மறைந்து விட்டதாக தேவையற்ற வதந்திகளை சோஷியல் மீடியாவில் சில விஷமிகள் பரப்பி உள்ளனர். நான் நல்லா ஆரோக்கியமாகத்தான் இருக்கேன். இப்போ காய்கறி கடையில் காய்களை வாங்கிக் கொண்டு இருக்கேன் என்று புன்னகைத்தார் நடிகை லக்ஷ்மி.

லக்ஷ்மி யானை
புதுவையில் யானை லக்ஷ்மி உயிரிழந்த செய்தி பலரது இதயத்தையும் உலுக்கிய நிலையில், சில விஷமிகள் யானை லக்ஷ்மிக்கு பதிலாக நடிகை லக்ஷ்மி உயிரிழந்து விட்டார் என சமயம் பார்த்து இப்படியொரு வதந்தியை கிளப்பி விட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது. ஜாக்கி சான் இறந்து விட்டார், சாலமன் பாப்பையா காலமானார் என தேவையற்ற வதந்திகளை அடிக்கடி நெட்டிசன்கள் சிலர் பரப்பி வருவதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர்.


Click it and Unblock the Notifications











