ஆதார் கார்டை வைத்து மிகப்பெரிய மோசடி.. வம்பில் சிக்கிய கேஜிஎஃப் நடிகை.!
சென்னை: என்னுடைய ஆதார் எண்ணை பயன்படுத்தி மோசடி செய்து விட்டார்கள், என நடிகை மாளவிகா அவினாஷ் தெரிவித்துள்ளார்.
சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை மாளவிகா அவினாஷ், ஜேஜே என்ற படத்தில் நாயகியின் சகோதரியாக நடித்து கவனத்தை ஈர்த்திருந்தார். தொடர்ந்து ஆறு, ஆதி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகை மாளவிகா அவினாஷ்: வழக்கறிஞரான மாளவிகா நடிகை மாளவிகா அவினாஷ் மாதவன் நடிப்பில் வெளியான ஜேஜே படத்தின் மூலம் தமிழில் சிறப்பான என்ட்ரியை கொடுத்தார். இந்தப் படத்தில் நாயகி ஜமுனாவின் சகோதரியாக, அவர் தனது காதலனை தேடிக் கண்டுபிடிக்க உதவும் கேரக்டரில் நடித்திருந்தார். தொடர்ந்து குணச்சித்திர கேரக்டர்களில் நடித்து வரும் மாளவிகா, தமிழில் சூர்யாவின் ஆறு, விஜய்யின் ஆதி, டிஷ்யூம் போன்ற படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார்.
கேஜிஎப் படத்தில்: வழக்கறிஞராகவும், சமூக ஆர்வலராகவும் அரசியல்வாதியாகவும் தொடர்ந்து செயல்பட்டு வரும் மாளவிகா சமீபத்தில் யாஷ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கேஜிஎப் மற்றும் கேஜிஎப் 2 படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.
மோசடி: இந்நிலையில், மாளவிகா தனது ஆதார் எண்ணை பயன்படுத்தி மோசடி நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதில், எனக்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் இருந்து அண்மையில் ஓர் அழைப்பு வந்தது. அதில், உங்கள் தொலைபேசி எண் இன்னும் இரண்டு மணி நேரத்தில் துண்டிக்கப்பட்டு விடும் என்றும், மேலும் விவரங்கள் அறிய 9ம் எண்ணைத் தொடர்பு கொள்ளவும் என்று கூறப்பட்டது.
மிரட்டல்: இதையடுத்து, தொலைத்தொடர்பு அதிகாரி ஒருவரிடம் விசாரித்தேன். அப்போது தான் அவர்கள், மும்பை காட்கோபர் பகுதியில் இருந்து என்னுடைய செல்போன் எண்ணில் இருந்து மிரட்டல் செய்திகள் அனுப்பப்பட்டதாகவும். இதனால், அந்த பெயரில் உள்ள அனைத்து எண்களும் துண்டிக்கப்பட இருப்பதாகவும் அவர் கூறினார். இதையடுத்து வீடியோ கால் மூலம், மும்பை போலீசாரை தொடர்பு கொண்டு, தான் யாரையும் மிரட்டவில்லை என்று கூறினேன்.
கவனமாக இருங்கள்: என் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி சிம் கார்டுகளை பெற்று இந்த மிரட்டலில் சிலர் ஈடுபட்டுள்ளனர். புகைப்படத்துடன் கூடிய ஆவணத்தை மற்றொருவர் எப்படி பயன்படுத்த முடியும் என ஆச்சரியம் தெரிவித்த நடிகை மாளவிகா அவினாஷ், பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களைப் போல ஆதாரும் முக்கியமானது. அதில் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











