போதைப் பொருள் விவகாரம்.. நடிகை ராகிணி திவேதியை தொடர்ந்து இன்னொரு பிரபல நடிகையும் கைது
சென்னை: போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகை ராகிணி திவேதி கைது செய்யப்பட்ட நிலையில், இன்னொரு பிரபல நடிகையும் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
தடை செய்யப்பட்ட எம்.டி.எம்.ஏ., எல்.எஸ்.டி. போதை மாத்திரைகளை பயன்படுத்திய விவகாரத்தில் நடிகை ராகிணி திவிவேதி முன்னதாக கைதி செய்யப்பட்டார்.
அதனை தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், இன்று அதிகாலை நடிகை சஞ்சனா கல்ரானியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

பாலிவுட் சிக்குமென பார்த்தால்
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தை தொடர்ந்து பாலிவுட்டில் நெப்போடிசம் பிரச்சனைக்கு மேல், தற்போது போதைப் பொருள் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. நடிகை கங்கனா ரனாவத் முக்கிய நடிகர்களின் பெயர்களை குறிப்பிட்டே சர்ச்சையை பெரிது படுத்தியுள்ளார். பாலிவுட் நடிகர்கள் சிக்குவார்கள் என பார்த்து கொண்டிருந்த நிலையில், கன்னட நடிகர்கள் போதைப் பொருள் விவகாரத்தில் சிக்கித் தவிக்கின்றனர்.

ராகிணி திவேதி
ஜெயம் ரவியின் நிமிர்ந்து நில் படத்தில் நடித்த நடிகை ராகிணி திவேதி, ராகிணி ஐபிஎஸ், கெம்பகவுடா உள்ளிட்ட ஏகப்பட்ட கன்னட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது பிரபலங்களுக்கு போதை மாத்திரைகளை சப்ளை செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு, போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வந்தார். விசாரணைக்கு சரியாக அவர் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

இன்னொரு நடிகையும் கைது
பிரபல கன்னட நடிகை ராகிணி திவேதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று அதிகாலை மற்றொரு பிரபல நடிகையான சஞ்சனா கல்ரானியும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கன்னட திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் (CCB) அதிகாரிகள் இந்த கைது வேட்டையை நடத்தி உள்ளனர்.

நிக்கி கல்ரானி சகோதரி
நடிகை நிக்கி கல்ரானியின் சகோதரி தான் சஞ்சனா கல்ரானி என்பது குறிப்பிடத்தக்கது. சொகடு எனும் தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமான இவர், ஒரு காதல் செய்வீர் என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார். தொடர்ந்து ஏகப்பட்ட தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ள இவர், போதைப் பொருள் விவகாரத்தில் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

கதிகலங்கும் கன்னட திரையுலகம்
கன்னட திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகைகளே போதைப் பொருள் விவகாரத்தில் சிக்கி உள்ள நிலையில், ஏகப்பட்ட பிரபல நடிகர்களும் இந்த விவகாரத்தில் சிக்குவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. சங்கிலி தொடர் போல விசாரணை வீரியம் அடைய அடைய ஒவ்வொருவராக சிக்கி வருவதால், கன்னட திரையுலகமே கதிகலங்கி போயுள்ளது. இதுவரை 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











