silk smitha: தூங்காமல் நான் காணும் சொப்பனமே.. கண்ணழகி சில்க் ஸ்மிதாவின் பிறந்த நாள் இன்று!
சென்னை: நடிகை சில்க் ஸ்மிதாவின் பிறந்த நாளான இன்று ரசிகர்கள் அவரை நினைவு கூர்ந்து போட்டோக்களை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை ஆச்சரியங்களும், திருப்பங்களும் நிறைந்தவையாக இருந்தன. வினுசக்கரவர்த்தி இயக்கிய வண்டிச்சக்கரம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார் சில்க்.

முதல் படத்தில் அவர் ஏற்றிருந்த சில்க் என்ற கதாபாத்திரம் ஸ்மிதா என்ற பெயரோடு ஒட்டிக்கொண்டு சில்க் ஸ்மிதாவாக மாறினார்.
காத்திருந்த திரையுலகம்: ரஜினிகாந்த், கமல், பிரபு, சத்யராஜ் என தமிழ் சினிமாவின் எந்த டாப் நடிகரின் படமாக இருந்தாலும், சில்க் ஸ்மிதாவின் கால்ஷீட்டுக்காக காத்திருந்தார்கள். படத்தில் சில்க் ஸ்மிதா பாட்டு ஒன்னு இருந்தா போதும் என தயாரிப்பாளர்கள் நினைத்தால், சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திலேயே உச்சத்தை தொட்டுவிட்டார்.
அழுத்தமான நடிப்பு: கவர்ச்சிக்கு மட்டுமில்ல குணசித்திர கதாபாத்திரத்திலும் புகுந்து விளையாடினார் இந்த திராவிட பேரழகி சில்க். பாலுமகேந்திராவின் மூன்றாம் பிறை, பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை படத்தில் கவர்ச்சியை தாண்டி தனது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி பெயர் எடுத்தார்.
கடித்து வைத்த ஆப்பிள்: பொன்மேனி உருகுதே, அடி ஏய் மனம் நில்லுனா நிக்காதடி, நேத்து ராத்திரி, ஆடிமாசம், பேசக்கூடாது, பூவே இளைய பூவே போன்ற பாடல்களில் தங்கத் தேர் போல வந்த காந்த கண்ணழகி சில்க்கிற்கு இன்றைய இளசுகளும் தீவிர ரசிகர்களாக இருக்கின்றனர். சில்க் கடிச்சுட்டு வெச்ச ஒரு ஆப்பிள் 1000 ரூபாய்க்கு ஏலம் போன கதையும் தமிழ் சினிமாவில் அந்த காலகட்டத்தில் நடந்தது உண்டு,.
கண்ணீர் கதை: திரை வாழ்க்கையில் மிகப்பெரிய உயரத்தில் இருந்த சில்க், சொந்த வாழ்க்கையில் கண்ணீருடனும் வேதனையுடனும் வாழ்ந்து வந்தார். காதல், ஏப்பேற்பட்டவரையும் முட்டாளாக்கிவிடும் என்பதற்கு, சில்க் சுமிதா மட்டும் என்ன விதிவிலக்கா?. அன்பை பார்த்து வராத காதல் அவர் உடல் மினுமினுப்பு மீதும், இவரின் பணத்தின் மீதும் வந்தது தான் வேதனை.
காதல் முறிவு: தனிமை, அன்புக்காக ஏங்கிய வாழ்க்கை, காதல் முறிவு என ஒட்டுமொத்தமும் இவரை வாட்டிவதைக்க திடீரென தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டார். சில்க்குடன் நடிப்பதற்கு அத்தனை ஹீரோக்கள் போட்டிப்போட்டனர். ஆனால் சில்க்கின் இறுதிச்சடங்கில் அர்ஜுன் மட்டுமே கலந்து கொண்டார் என்பது தான் வேதனையிலும் வேதனை.


Click it and Unblock the Notifications











