விஜய், அஜித், சூர்யா படங்களை தயாரித்த தயாரிப்பாளர் மோகன் நடராஜன் காலமானார்.. சூர்யா நேரில் அஞ்சலி
சென்னை: விஜய்யின் கண்ணுக்குள் நிலவு, அஜித்தின் ஆழ்வார், சூர்யாவின் வேல், சியான் விக்ரமின் தெய்வத்திருமகள் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த தயாரிப்பாளர் மோகன் நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 71.
ராஜகாளியம்மன் மூவிஸ் நிறுவனத்தை நடத்தி வந்தவர் தயாரிப்பாளர் மோகன் நடராஜன். பல வெற்றிப் படங்களை தயாரித்து தமிழ் சினிமாவுக்கும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்த மோகன் நடராஜனின் மறைவு சினிமா பிரபலங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் சூர்யா, இயக்குநர் பி. வாசு உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் நேரில் சென்று அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய காட்சிகளும் வெளியாகி உள்ளன. இயக்குநரும் நடிகருமான டி. ராஜேந்தர் தயாரிப்பாளர் மோகன் நடராஜனின் மறைவுக்கு உருக்கமான கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.
தயாரிப்பாளர் மோகன் நடராஜன் காலமானார்: ராஜகாளியம்மன் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் 'பூக்களை பறிக்காதீர்கள்’, 'பூ மழை பொழியுது’, 'இனிய உறவு பூத்தது’, 'என் தங்கச்சி படிச்சவ’, 'பிள்ளைக்காக’, 'எங்க அண்ணன் வரட்டும்’, 'வேலை கிடைச்சிருச்சு’, 'கிழக்குக்கரை’, 'கோட்டைவாசல்’, 'சாமுண்டி’, 'மறவன்’, 'பதவி பிரமாணம்’, 'கண்ணுக்குள் நிலவு’, 'ஆழ்வார்’, 'வேல்’ மற்றும் 'தெய்வத்திருமகள்’ ஆகிய பல தமிழ் படங்களை தயாரித்து வந்த மோகன் நடராஜன் மற்ற மொழிகளிலும் சில படங்களை தயாரித்துள்ளார். 71 வயதான அவர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவு தமிழ் சினிமாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சூர்யா நேரில் அஞ்சலி: ஹரி இயக்கத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்த வேல் திரைப்படத்தை தயாரித்த மோகன் நடராஜன் மறைந்து விட்டார் என்கிற செய்தியை கேட்டதுமே கலங்கிப் போன கங்குவா நாயகன் சூர்யா காலையிலேயே தயாரிப்பாளரின் வீட்டுக்குச் சென்று அவரது திருவுடலுக்கு மாலை அணிவித்து கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.
டி. ராஜேந்தர் இரங்கல் அறிக்கை: ”கண்ணுக்குள் நிலவு, ஆழ்வார், வேல், தெய்வ திருமகள் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த தயாரிப்பாளர் திரு. மோகன் நடராஜன் மறைந்துவிட்டார் என்ற செய்தி என் மனதை ஈட்டி போல் தாக்கியது.

மறைந்த இயக்குனர் வேந்தன் பட்டி அழகப்பன் இயக்கத்தில் நான் பாடல்கள் எழுதி இசையமைத்து தாங்கள் தயாரித்த படம் பூக்களை பறிக்காதீர்கள்.
இந்த மண்ணை விட்டு மறைந்து எங்கள் மனதை வருத்தாதீர்கள்
இதயம் தாங்கவில்லை
துக்கம் தாளவில்லை
கண்ணீர் பூக்களால் அஞ்சலி செலுத்துகிறேன்
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆறுதலை கூறி கொள்கிறேன்.
அவரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இப்படிக்கு,
டி. ராஜேந்தர் M.A,” என தனது இரங்கல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். இயக்குநர் பி. வாசு உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் மறைந்த பிரபல தயாரிப்பாளர் உடலுக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர். தயாரிப்பாளர் மோகன் நடராஜனின் மறைவு தமிழ் சினிமாவில் ஈடு செய்ய முடியாத ஒன்று என்றும் நல்ல படங்களை தமிழ் சினிமாவுக்கு தந்த அவர் சினிமாவில் வாழும் கலைஞர்களுக்கும் அதிக உதவிகளை செய்துள்ளார் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











