இனப்படுகொலையில் பங்கு பெறப் போகிறீர்களா? - கத்தி படத்துக்கு எதிராக மாணவர்களின் போஸ்டர்கள்!
சென்னை: கத்தி படத்துக்கு எதிரான போர்க்குரல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.
இன்று அந்தப் படத்தை எதிர்த்து கடுமையான வாசகங்களுடன் சுவரொட்டிகளை வெளியிட்டுள்ளனர் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பினர். அதுவும் விஜய்யின் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்காகவே இந்த சுவரொட்டி அச்சிடப்பட்டுள்ளது.
அந்த சுவரொட்டிகளில் இடம்பெற்றுள்ள வாசகங்கள்:

அன்பார்ந்த நடிகர் விஜய்யின் மக்கள் இயக்க நண்பர்களே, ரசிகர்களே...
மூன்றரை லட்சம் ஈழத் தமிழ் உறவுகளை திட்டமிட்டு இனப்படுகொலை செய்த சிங்கள இனவெறி இனப்படுகொலைக்காரன் ராஜபக்சே அரசுக்கு பொருளாதார ரீதியாக உதவிக் கொண்டிருக்கும் லைகா நிறுவனத்துக்கு, நீங்கள் 'கத்தி' திரைப்படம் மூலம் வருமானம் ஈட்டித் தரப் போகிறீர்களா?
தொடர்ந்து கொண்டிருக்கும் இனப் படுகொலையில் நீங்களும் பங்கு பெறப் போகிறீர்களா?
உயிர் தந்த தாயும் உடன் பிறந்த சகோதரியும் உன் கண்முன்னே கற்பழிக்கப்படுவார்களேயானால்,
சிங்கள ராணுவத்தால் உன் தந்தையும் சகோதரனும் படுகொலை செய்யப்படுவார்களேயானால்,
முள்வேலி முகாம்களில் சித்திரவதைக்குட்படுத்தப்படுவது
உன் குடும்பமாக இருந்தால்..
நீ என்ன செய்வாயோ.. அதைச் செய்!
-இவ்வாறு வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. கூடவே, தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications











