ஆந்திர ஹீரோ சவாலை ஏற்ற நடிகர் விஜய், ஆந்திர முதல்வரை போல.. ஆஹா.. அதகளப்படுத்தும் அரசியல் போஸ்டர்!
மதுரை: நடிகர் விஜய் ரசிகர்கள் மதுரையில் ஒட்டியுள்ள அரசியல் போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
கடந்த சில நாட்களுக்கு முன், பிரபல தெலுங்கு ஹீரோ மகேஷ் பாபு, தனது பிறந்த நாளைக் கொண்டாடினார்.
அப்போது #GreenIndiaChallenge என்ற சவாலில் பங்கேற்ற அவர், ஒரு மரக்கன்றை நட்டார்.

மரக்கன்று நட்டார்
நடிகர் விஜய், தெலுங்கு ஹீரோ ஜூனியர் என்.டி.ஆர், நடிகை ஸ்ருதிஹாசன் ஆகியோருக்கு அந்த சவாலை பரிந்துரைத்தார். இதை ஏற்ற நடிகர் விஜய் தனது வீட்டில் மரக்கன்று ஒன்றை நட்டார். 'இது உங்களுக்காக. பசுமையான இந்தியாவும், நல் ஆரோக்கியமும் கிடைக்க வாழ்த்துகள். பாதுகாப்பாக இருங்கள்' என்று கூறியிருந்தார். விஜய் மரக்கன்று நடும் போட்டோ, சமூக வலைதளங்களில் வைரலானது.

அரசியலுக்கு வரவேண்டும்
இந்நிலையில், நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவர் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பாக, அவரது ரசிகர்கள் அடிக்கடி பரபரப்பு போஸ்டர்களை ஒட்டுவது வழக்கம். வருங்கால முதல்வரே, நாளைய தமிழகமே என்றும் தமிழகத்தை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும் என்பது போலவும் அதில் தெறிக்கும் வாசகங்களும் இடம்பெற்றிருக்கும்.

பரபரப்பு போஸ்டர்
கடந்த பிப்ரவரி மாதம், ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன், பிரசாந்த் கிஷோர் ஆகியோருடன் விஜய் இருப்பது போன்ற புகைப்படத்துடன் பரபரப்பு போஸ்டர் ஒன்றை ஒட்டியிருந்தனர். அதில், ஆந்திராவை நாங்கள் காப்பாற்றி விட்டோம். கலங்கி நிற்கும் தமிழ்நாட்டை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும், மக்கள் நலன் கருதி களமிறங்குங்கள் என்று போஸ்டர் ஒட்டி இருந்தனர்.

ஆந்திர முதல்வர் போல
கடந்த சில நாட்களுக்கு முன் கூட இதுபோன்ற போஸ்டரை ஒட்டி இருந்தனர். இந்நிலையில் விஜய் மரக்கன்று நட்டதை வைத்து வேறொரு போஸ்டரை அவரது மதுரை ரசிகர்கள் ஒட்டியுள்ளனர். அதில், 'ஆந்திர நடிகரின் சவாலை ஏற்று மரக்கன்று நட்ட விஜய், நாளை ஆந்திர முதல்வரை போல தமிழகத்தில் நல்லாட்சி கொடுப்பார்' என விஜய் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். மதுரையில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











