பவர்ஸ்டாரின் 'நாலு பேரும் ரொம்ப நல்லவங்க'...
நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் ஹிட்டானாலும் ஆனது... கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்கள் அதே மாதிரி தலைப்போடு தயாராகி வருகின்றன.
அப்படி உருவாகும் ஒரு படம்தான் 'நாலு பேரும் ரொம்ம்ம்ப நல்லவங்க'.
ஐ சினிமாஸ் என்கிற புதிய நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் நடிக்கிறார். அவருடன் இணைந்து பாலாஜி, யாசின் மற்றும் திருப்பதி ஆகிய மூவரும் கதாநாயகர்களாக அறிமுகமாகிறார்கள்.
சினேஹல், திஷா ஆகியோர் கதாநாயகிகளாக அறிமுகமாகிறார்கள். அவுரங்காபாத்தைச் சேர்ந்த அப்சர்கான் வில்லனாக அறிமுகம் ஆகிறார். சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

படத்தின் கதை இதுதான்...
திருட்டையே தொழிலாகக் கொண்ட மூன்று இளைஞர்கள், திருட்டு-பொய்-புரட்டு-பித்தலாட்டம் என்று எதுவுமே தெரியாத அப்பிராணி பவர் ஸ்டாருடன் சேருகின்றனர். பவருடன் சேர்ந்த திருடர்கள் திருந்துகின்றனரா அல்லது திருடர்களுடன் சேர்ந்த பவரும் திருடன் ஆகிறாரா என்பது தான் கதைச் சுருக்கம்.

பாவலர் வரதராஜன் மகன்
இந்தப் படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குனர் ஜோவி. இவர் இயக்குனர் ஆர்.வி.உதயகுமாரிடம் பல படங்களுக்கு இணை-துணை இயக்குனராகவும் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியவர்.
ஜோவி, இளையராஜாவின் மூத்த சகோதரர் பாவலர் வரதராஜனின் இளைய மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

யாசின் ஹவேலி
கர்நாடக மாநிலம் பெல்ஹாமிலிருந்து வந்திருக்கும் யாசின் ஹவேலி கதா நாயகர்களில் ஒருவராக நடிப்பதுடன் படத்தைத் தயாரிக்கவும் செய்கிறார். இன்னொரு கதாநாயகன் பாலாஜி இவருக்குத் தயாரிப்பில் உறுதுணையாக இருக்கிறார்.

யுவன் சங்கர் ராஜா
தனது சகோதரர் ஜோவியின் படத்துக்கு இசையமைக்க ஒப்புக் கொண்டுள்ளார் யுவன் ஷங்கர் ராஜா. படத்தில் ஐந்து பாடல்கள் இடம்பெறுகின்றன. இந்தப் படத்தின் படப்பிடிப்பு, வரும் மார்ச் 14 இல் தொடங்கி ஊட்டி, தூத்துக்குடி, அந்தமான் போன்ற இடங்களில் நடைபெறவுள்ளது.

தொழில் நுட்பக் கலைஞர்கள்
கதை-திரைக்கதை-வசனம்-இயக்கம் : ஜோவி, இசை : யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு : தரன் டி தாமு, எடிட்டிங்: டி.எஸ்.ஆர்.சுபாஷ், கலை: மகி, மக்கள் தொடர்பு: எஸ்.செல்வரகு, தயாரிப்பு: யாசின், ஹெச் ஹவேலி


Click it and Unblock the Notifications











