விஜய்க்கு போட்டி நான்தான்.. எங்கே நின்றாலும் எதிர்ப்பேன்.. பவர் ஸ்டார் சீனிவாசன் சீற்றம்
சென்னை: விஜய் தற்போது அரசியலில் கவனம் செலுத்திவருகிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கும் அவர் 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்கவிருக்கிறார். கண்டிப்பாக விஜய்யை வெல்ல வைத்து கோட்டைக்குள் அனுப்ப வேண்டும் என்று உறுதி எடுத்திருக்கிறார்கள் தொண்டர்களாகிய அவரது ரசிகர்கள். அவரும் அதற்கான முழு திட்டத்தோடு களமாடிவருகிறார். இந்தச் சூழலில் பவர் ஸ்டார் சீனிவாசன் விஜய்யை விளாசி பேசியிருக்கிறார்.
கோலிவுட்டில் மிகப்பெரிய வசூல் செய்யும் ஹீரோக்களில் ஒருவர் விஜய். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான GOAT திரைப்படம்கூட 300 கோடி ரூபாய்வரை வசூல் செய்ததாக படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. வரிசையாக அவர் நடித்த படங்கள் எல்லாமே அசால்ட்டாக 200 கோடி ரூபாய்வரை வசூலிக்கின்றன. இதனால் அவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அவரது ரசிகர்கள் கடந்த சில காலமாகவே தொடர்ந்து கூறிவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியலில் விஜய்: ஆனால் அவர் இன்னும் ஒரு படத்தில் மட்டும்தான் நடிக்கவிருக்கிறார். ஜன நாயகன் பெயர் வைக்கப்பட்டிருக்கும் அந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்கிவருகிறார். இந்தப் படத்தை முடித்துவிட்டு சினிமாவிலிருந்து விலகும் அவர் அரசியலில் முழு கவனத்தையும் செலுத்துகிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கும் அவர் இப்போதே 90 சதவீத அரசியல்வாதியாக மாறிவிட்டார். இது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தாலும் சினிமாவிலிருந்து அவர் விலகுவதாக அறிவித்திருப்பது சின்ன சோகத்தையும் கொடுத்திருக்கிறது.

விளாசும் விஜய்: முதலில் விக்கிரவாண்டியில் வைத்து தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்தினார். அதில் தனது கொள்கை, அரசியல் எதிரி உள்ளிட்டவைகளை விளக்கினார். பிறகு எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார். அதிலும் அரசியல் ரீதியான பேச்சுக்களை முன்வைத்தார். இந்த இரண்டு இடங்களிலுமே அவர் நேரடியாகவும், மறைமுகமாகவும் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். இதனால் அவருக்கு எதிராக திமுகவினர் களமாட ஆரம்பித்திருக்கிறார். அதேபோல் பரந்தூர் சென்றபோதும் கடுமையாக விமர்சனம் செய்தார்.
தவெக பொதுக்குழு கூட்டம்: அவர் எப்போது திமுகவை குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்தாலும் முதலமைச்சர் ஸ்டாலினின் பெயரையும், பிரதமர் மோடியின் பெயரையும் சொல்லாமல் இருந்தார். இப்படிப்பட்ட சூழலில் சில நாட்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் திருவள்ளூரில் நடைபெற்றது. அதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டார். விஜய் அந்தக் கூட்டத்தில் எவ்வாறு பேசப்போகிறார் என்பதுதான் பலரின் எதிர்பார்ப்பாக இருந்தது.
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்: அந்த கூட்டத்தின் மேடையில் பேசிய விஜய், 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே வீராப்பாக பேசினால் மட்டும் போதாது செயலிலும் காட்ட வேண்டும். எப்போ பார்த்தாலும் பெயரை சொல்ல மறுக்கிறேன் என்று கூறுகிறார்கள். நான்கூட ஒரு படத்தில் சொல்வேனே லியோவ காணும், லியோவ காணும்னு. அதுமாதிரி இருக்கு இது. அடுத்த வருட தேர்தல் தமிழ்நாட்டில் வித்தியாசமானதாக இருக்கும். தவெகவுக்கும், திமுகவுக்கும் மட்டும்தான் போட்டி' என பேசியிருந்தார்.
பவர் ஸ்டார் சீனிவாசன்: இந்நிலையில் ஒரு படத்தின் பூஜையில் கலந்துகொண்ட பவர் ஸ்டார் சீனிவாசன் விஜய் குறித்து பேசினார். அப்போது பேசிய அவர், "விஜய் முதலில் களத்துக்கு வர வேண்டும். பாரம்பரிய கட்சியான திமுகவை கண்டபடி விமர்சனம் செய்யக்கூடாது. நான் முதலமைச்சர் ஸ்டாலின் மீது மிகப்பெரிய மரியாதையை வைத்திருக்கிறவன். தமிழ்நாட்டில் விஜய் எந்தத் தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன். ஏனெனில் எனக்கும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











