'நான் திரும்ப வருவேன்' த்மிழில் படமாக வெளியாகும் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு
சென்னை : விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு தமிழில் திரைப்படமாக வெளியாக இருக்கிறது.
சிறிய இடைவெளிக்குப் பிறகு நடிகர் மோகன்பாபுவின் மகன் மனோஜ் மஞ்சு நடிக்கும் திரைப்படம் 'ஒக்கடு மிகிலடு'. இந்தப் படத்தில் அவர் ஒரு போராளியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் கதை இலங்கை விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கைக் கதை எனக் கூறப்படுகிறது. அதனால்தான் 'அன்டோல்டு ஸ்டோரி' என கேப்சன் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடந்தது. படத்தை அஜய் ஆண்ட்ரூஸ் இயக்க பத்மஜா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 'ஒக்கடு மிகிலடு' தமிழில் 'நான் திரும்ப வருவேன்' எனும் பெயரில் வெளியாக இருக்கிறது. தமிழில் வசனம் மற்றும் பாடல்களை சுரேஷ் ஜித்தன் எழுதியிருக்கிறார். செப்டம்பர் மாதம் தெலுங்கில் வெளியாகும்போதே தமிழிலும் வெளியிட முடிவு செய்திருக்கிறார்களாம்.
தென்னிந்தியாவைப் பொறுத்தவரை மிக சென்சிட்டிவ்வான அரசியல் போராட்டங்களில் ஒன்று இலங்கை உள்நாட்டுப் போர். அதை மையப்படுத்தி தமிழில் சில படங்கள் வெளிவந்திருந்தாலும் தெலுங்கில் அந்தமாதிரியான படங்கள் வெளிவந்தது இல்லை.

அதுபோக, இந்தப் படத்தின் போஸ்டரில் புலிகள் இயக்கத்தின் லச்சினை சாயல் இருக்கிறது. பிரபாகரனின் ஆரம்ப கால வாழ்க்கையையும், புலிகள் இயக்கத்தைப் பற்றியும் எடுக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
வழக்கமாக, காரசாரமான மசாலா படங்கள் வெளியாகும் தெலுங்கு சினிமாவில் இந்தப் படம் உணர்வு ரீதியாக எடுக்கப்பட்டிருக்குமா எனத் தெரியவில்லை. பிரபாகரனைத் தவறாக சித்தரிப்பதைப் போல இருந்தால் தமிழில் வெளிவருவதில் சிக்கல் ஏற்படலாம் என சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











