பிரபல ஹீரோ பர்த் டே.. பேனர் கட்டும்போது மின்சாரம் தாக்கியதில் ரசிகர் பலி.. 4 பேர் படுகாயம்!
ஐதராபாத்: நடிகர் பிரபாஸின் பிறந்த தினத்தை முன்னிட்டு பேனர் கட்டிய அவர் ரசிகர் ஒருவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல தெலுங்கு ஹீரோ பிரபாஸ். பாகுபலி படத்துக்குப் பிறகு அவர் இந்தியா முழுவதும் அறியபட்டார்.
இதையடுத்து அவர் நடிக்கும் படங்கள் பான் இந்தியா முறையில் ஐந்து மொழிகளில் உருவாகி வருகின்றன.

சயின்ஸ் பிக்சன் கதை
அவர் இப்போது, ராதே ஷ்யாம், ஆதிபுருஷ், நாக் அஸ்வின் இயக்கும் படங்களில் நடித்து வருகிறார். மெகா பட்ஜெட்டில் இந்த படங்கள் உருவாகி வருகின்றன. ராதே ஷ்யாம் படத்தில் அவர் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ஆதிபுருஷ் படம், ராமாயணக் காவியத்தின் ஒரு பகுதியை கொண்டு உருவாகிறது. நாக் அஸ்வின் இயக்கும் படம் சயின்ஸ் பிக்சன் என்று தெரிகிறது.

திக்கு முக்காட
இந்நிலையில், நடிகர் பிரபாஸுக்கு நேற்று பிறந்த நாள். இதையடுத்து ஏராளமான திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளால் திக்கு முக்காட வைத்தனர். அவர் பிறந்தநாளை முன்னிட்டு ராதே ஷ்யாம் படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இந்த வீடியோ ரசிகர்களிடையே வைரலானது.

பிரமாண்ட பேனர்கள்
பிரபாஸின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் ரசிகர்கள், பல்வேறு பகுதிகளில் பிரமாண்ட பேனர்கள் கட்டியும் பட்டாசுகளை வெடித்தும் ரணகளமாகக் கொண்டாடினர். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள புனுரு என்ற பகுதியை சேர்ந்த ரசிகர்கள், பேனர் கட்டிக்கொண்டிருந்தனர்.

பேனர் கட்டும்போது
வன்கயலபட்டி சுகுனராவ் என்ற ரசிகர் உள்பட சிலர் மின் ஒயரைக் கவனிக்காமல் பேனரைக் கட்டியதாகக் கூறப்படுகிறது. அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதில், சுகுனராவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் நான்கு ரசிகர்கள் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மின்சாரம் தாக்கி
இதுபற்றி போலீசார் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனர். ஆந்திராவில் பேனர் கட்டும் போது மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன், பவன் கல்யாண் ரசிகர்கள் பேனர் கட்டும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

ஆர்வலர்கள் கோரிக்கை
பிரபாஸின் சாஹோ பட ரிலீஸ் நேரத்திலும் பேனர் கட்டும்போது, தெலங்கானா மாநிலம், மகபூப் நகரைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அடிக்கடி இதுபோன்று நடப்பதால், இதுபற்றி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











