சாஹோ பட பேனர் வைத்தபோது ஷாக் அடித்து பிரபாஸ் ரசிகர் மரணம்
Recommended Video
ஹைதராபாத்: தெலுங்கானாவில் உள்ள தியேட்டர் ஒன்றில் சாஹோ பட பேனரை வைக்கும்போது பிரபாஸ் ரசிகர் ஒருவருக்கு ஷாக் அடித்து உயிர் இழந்தார்.
சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், நீல் நிதின் முகேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள சாஹோ படம் நாளை ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் மெஹபூப்நகரில் இருக்கும் தியேட்டர் ஒன்றில் சாஹோ பேனர்கள் வைக்கப்பட்டது.

பிரபாஸ் ரசிகர் ஒருவர் இன்று தனது நண்பர்களுடன் அந்த தியேட்டருக்கு சென்று பேனர்களை வைத்தார். அப்பொழுது அவர் மீது மின்சார வயர் உரசி அவருக்கு ஷாக் அடித்து தியேட்டர் கட்டடி உச்சியில் இருந்து கீழே விழுந்தார். இதையடுத்து அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த சம்பவம் குறித்து தியேட்டர் உரிமையாளர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவல் கிடைத்த உடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ரசிகரின் மரணம் குறித்து பிரபாஸோ, சாஹோ குழுவோ இதுவரை அனுதாபம் எதுவும் தெரிவிக்கவில்லை. முன்னதாக இது போன்ற சம்பவம் நடந்தபோது பிரபாஸ் உயிர் இழந்த ரசிகரின் வீட்டிற்கு சென்று அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
சிறு சிறு பேனர்கள் தவிர்த்து பிரபாஸின் தீவிர ரசிகர்கள் சிலர் ஹைதராபாத்தில் 200 அடி பேனர் வைத்துள்ளனர். சாஹோ படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது. தமிழகத்தில் மட்டும் 500 ஸ்கிரீன்களில் சாஹோ ரிலீஸாகிறது.
பாகுபலி, பாகுபலி 2 படங்களால் பிரபாஸுக்கு இந்தியா முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்துவிட்டனர். இதனால் சாஹோ படத்தை பிரமாண்டமாக வெளியிடுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











