நம்பர் ஒன்.. முதல் நாளே 100 கோடிக்கும் அதிகமான வசூல்.. தொடர்ந்து அதிரடி காட்டி வரும் பிரபாஸ்!
சென்னை: சலார் படத்தை தொடர்ந்து கல்கி 2898 ஏடி திரைப்படம் நடிகர் பிரபாஸுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியுள்ளது. தொடர்ந்து மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் படங்களை கொடுத்து டோலிவுட்டை காப்பாற்றி வரும் ஆபத் பாண்டவனாகவே பிரபாஸ் மாறியுள்ளார். மேலும், இந்திய அளவில் முதல் நாளில் 100 கோடி ரூபாய் வசூலை அதிக அளவில் ஈட்டும் திறமை கொண்ட நடிகராகவும் நம்பர் ஒன் இடத்தை பிரபாஸ் பிடித்துள்ளார்.
நாக அஸ்வின் இயக்கத்தில் நேற்று வெளியான கல்கி 2898 ஏடி திரைப்படம் முதல் நாளில் 191 கோடி ரூபாய் வசூல் ஈட்டி உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதற்கு முழுமுதற் காரணமும் நடிகர் பிரபாஸ் தான் என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சலாம் திரைப்படம் கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி 700 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூல் வேட்டையை நடத்தியது. அதன் தொடர்ச்சியாகவே தற்போது கல்கி படத்தை முதல் நாளிலேயே பார்க்க உலகம் முழுவதும் உள்ள பிரபாஸ் ரசிகர்கள் தியேட்டருக்கு குவிந்துவிட்டனர் என்கின்றனர்.
இந்தியாவிலேயே நம்பர் ஒன்: பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸின் உச்சம் இந்திய அளவில் மிகப்பெரிய இடத்தை அவருக்கு பெற்றுத் தந்தது. பாகுபலி 2 திரைப்படம் 1800 கோடி ரூபாய் வசூலை ஈட்டி பாலிவுட் நடிகர்களை பயமுறுத்திய நிலையில், அமீர்கான் மட்டுமே தங்கல் படத்தின் மூலம் அந்த வசூலை முறியடித்துள்ளார். ஷாருக்கான் மற்றும் சல்மான்கான் போன்ற பாலிவுட் நடிகர்களால் கூட பிரபாஸின் சாதனையை இன்னமும் முறியடிக்கவில்லை. இந்நிலையில், அதிக முறை 100 கோடி ரூபாய் வசூலை முதல் நாளிலேயே கடந்த நடிகராக இந்தியாவிலேயே நம்பர் ஒன் இடத்தை பிரபாஸ் பிடித்திருப்பதாக அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஷாருக்கான் முதல் விஜய் வரை: ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ராஜமௌலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படத்தின் மூலம் 100 கோடி வசூலை முதல் நாளில் பார்த்த நாயகர்களாக மாறினர். அனிமல் படத்தின் மூலம் ரன்பீர் கபூர் அந்த சாதனையை பெற்றார். லியோ படம் மூலம் நடிகர் விஜய் முதல் நாளில் 142 கோடி வசூலை சாத்தியம் ஆக்கினார். கேஜிஎஃப் 2 திரைப்படம் மூலம் யஷ் 100 கோடி பாக்ஸ் ஆபிஸை முதல் நாளில் தட்டித் தூக்கினார். பதான் மற்றும் ஜவான் உள்ளிட்ட படங்கள் ஷாருக்கானுக்கு அந்த அந்தஸ்த்தை பெற்றுத் தந்தது. பாகுபலி 2, சாஹோ, ஆதி புருஷ், சலார் மற்றும் கல்கி 2898 ஏடி என வரிசையாக நான்கு படங்கள் முதல் நாளிலேயே 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை ஈட்டி பிரபாஸை முதல் இடத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது.
300 கோடியாக சம்பளம் அதிகரிக்குமா?: விஜய் மற்றும் அல்லு அர்ஜுன் 275 கோடி ரூபாய் சம்பளத்தை டார்கெட் செய்து வரும் நிலையில், அடுத்தடுத்து மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படங்களை கொடுத்து வரும் பிரபாஸ் தனது சம்பளத்தை 200 கோடியில் இருந்து 300 கோடிக்கு உயர்த்துவாரா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. கல்கி 2898 ஏடி திரைப்படம் 1500 கோடிக்கும் அதிகமான வசூலை அடைந்தால் அதுவும் நடக்கலாம் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











