Kalki 2898 AD: தொட்டதெல்லாம் பொன்.. தொள்ளாயிரம் கோடியை அள்ளிய கல்கி.. விரைவில் ஆயிரம் கோடிக்கு அதிபதி!
சென்னை: நடிகர் பிரபாஸ் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி வெளியான படம் கல்கி 2898 ஏ.டி. இந்த படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. படம் ரிலீஸான முதல் நாளே ரூபாய் 191.5 கோடி ரூபாயை வசூல் செய்திருந்தது. இதில் முன்பதிவில் மட்டும் கிட்டத்தட்ட ரூபாய் 40 கோடி வசூல் செய்தது. மேலும் வட அமெரிக்காவில் மட்டும் படம் வெளியான முதல் வாரத்திலேயே ரூபாய் 100 கோடியை அள்ளியது.
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க, அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், பசுபதி, அன்னா பென், தீஷா பதானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படத்தில் கமல்ஹாசன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். படம் மகாபாரதக் கதையைத் தழுவி எதிர்கால அறிவியல் வளர்ச்சியை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. படம் 3டி மற்றும் ஐமேக்ஸிலும் வெளியானது.

படம் முதல் நாளே இந்தியா முழுவதும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான திரையரங்குகளில் இந்தியா முழுவதும் திரையிடப்பட்டது. தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் சிறப்புக் காட்சிகள் எல்லாம் ஒளிபரப்பப்பட்டன. இது மட்டும் இல்லாமல் படத்தினை தயாரித்த வைஜெயந்தி மூவீஸ் நிறுவனம் தனது பொன்விழா ஆண்டைக் கொண்டாடுவதற்கு ஏதுவாக ரூபாய் 600 கோடி செலவில் இந்தியாவிலேயே மிகவும் பிரமாண்டமான பொருட்செலவில் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இதனால் படத்தின் ரிலீஸ்க்கு முன்னர் இருந்தே படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருந்தது. மேலும் படத்தின் ரிலீஸைத் தொடர்ந்து ஆந்திராவில் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டது. மும்பையில் ஒரு டிக்கெட்டின் விலை ரூபாய் 2300 வரை விற்பனை செய்யப்பட்டது.
900 கோடி வசூல்: படம் வெளியாகி நேற்றுடன் அதாவது, ஜூன் 7ஆம் தேதியுடன் 11 நாட்கள் மட்டுமே ஆகின்றது. இந்த 11 நாட்களில் படம் உலகம் முழுவதும் ரூபாய் 900 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்த தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக தங்களது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதுமட்டும் இல்லாமல் படம் இன்னும் ஒரு சில நாட்களில் ரூபாய் 1000 கோடிகளை வசூல் செய்யும் என்பது உறுதியாகிவிட்டதால் படக்குழு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

1000 கோடி வசூல் வேட்டை: ஏற்கனவே பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் ரூபாய் 1500 கோடிகளை உலகம் முழுவதும் வசூல் செய்தது. அதன் பின்னர் வந்த சலார் படம் ரூபாய் 650 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. சலாருக்கு முன்னர் வெளியான ஆதிபுருஷ் ரூபாய் 500 கோடிகளைக் கூட வசூல் செய்யவில்லை. இந்நிலையில் கல்கி 2898 ஏ.டி. படம் ரூபாய் 1000 கோடிகளை வசூல் செய்யப்போவது உறுதியாகிவிட்டதால் பிரபாஸ் மற்றும் அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

கொரிய வில்லன்: பிரபாஸ் அடுத்து நடிக்கவுள்ள ஸ்பிரிட் படத்தில் தென் கொரிய சினிமாக்களில் கலக்கி வரும் மா தாங் சோக் வில்லனாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனையும் பிரபாஸ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











