The Raja Saab BO: உப்புமாவே கிண்டி வச்சாலும்.. பிரபாஸ்க்கு மாஸ் ஓபனிங் தான்.. தி ராஜா சாப் முதல் நாள் வசூல்
சென்னை: பிரபாஸ், நிதி அகர்வால், மாளவிகா மோகனன், ரித்தி குமார் என மூன்று கதாநாயகிகள் நடித்து வெளியான படம் தி ராஜா சாப். ராஜா சாப் படத்தை மாருதி எழுதி இயக்கி உள்ளார். படம் தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ் என ஐந்து மொழிகளிலும் வெளியானது. கடந்த 2024ஆம் ஆண்டு பிரபாஸ் நடிப்பில் கல்கி 2898 கி.பி படத்திற்கு பின்னர் வெளியாகும் படம் தி ராஜா சாப் என்பதால், இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் படத்திற்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பு கொடுத்தனர். படத்தின் முதல் நாள் வசூல் குறித்து பார்க்கலாம்.
சுமார் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த தி ராஜா சாப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் கடந்த ஆண்டு ஜனவரிக்கே ரிலீஸ் ஆவதாக பேச்சுக்கள் அடிபட்டது. ஆனால் படம் கடந்த ஆண்டு பொங்கல் விடுமுறையில் வெளியாகவில்லை. அதன் பின்னர் கடந்த ஆண்டிலேயே அடுத்தடுத்து தேதிகள் மாற்றி வைத்துக் கொண்டே இருந்தார்கள். ஆனால் படம் அந்த தேதிகளில் வெளியாகவில்லை. மாறாக படம் நேற்று அதாவது ஜனவரி 9ஆம் தேதி வெளியானது.

அடக்கி வாசிப்பு: படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனாலும் படக்குழு புரோமோசன்களில் கொஞ்சம் அடக்கி வாசித்து வந்தனர். இது சில ரசிகர்களுக்கு சந்தேகத்தை கிளப்பினாலும், எப்படியும் பிரபாஸ் படம், மூன்று கதாநாயகிகள் இருக்கிறார்கள். எனவே படம் நன்றாகத்தான் இருக்கும் என்று நம்பிக் கொண்டு இருந்தார்கள்.
ரசிகர்கள் சேட்டை: ஹைதராபாத்தில் ரசிகர்கள் ஒரு தியேட்டருக்கு படம் பார்க்க வரும்போது சுமார் 5 அடி நீளமுள்ள பொம்மை முதலைகளை கையில் எடுத்துக் கொண்டு சென்று படம் பார்த்தனர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி இணையவாசிகளையும் மற்ற பிரபாஸ் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பலரும் இது போல ரசிகர்கள் செய்யக் கூடாது என்று விமர்சித்தனர்.

வசூல்: பிரபாஸ் பேன் இந்தியா அளவில் ஒரு சூப்பர் ஸ்டாராக உள்ளார். எனவே இவரது படம் வந்தாலே ஒரு பெரிய கவனம் இந்தியா முழுவதும் குவிந்து விடுகிறது. அப்படி இருக்கையில் தி ராஜா சாப் படம் வெளியானது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் தொடர்ந்து கிடைத்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால், தமிழ் டப்பிங்கிலே பல நகைச்சுவை காட்சிகள் ஒர்க்- அவுட் ஆகவில்லை என்று கூறுகிறார்கள். ஆனாலும் படம் முதல் நாளில் இந்தியா முழுவதும் ரூபாய் 54.15 கோடிகள் வசூலித்துள்ளதாக சாக்நிக் வலைதளம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் படம் எப்படியும் ரூபாய் 120 கோடிகளுக்கு மேல் வசூலித்திருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ வசூல் கணக்கு படக்குழு தரப்பில் இருந்து இன்னும் வெளியிடப்படவில்லை.


Click it and Unblock the Notifications











