பொங்கலுக்கு அந்த பெரிய ஹீரோ படம் வராதா?.. அப்போ ஜன நாயகன் விஜய்க்கு ஜாக்பாட் தானா?
சென்னை: தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா ஓடிடி வருகை காரணமாக ரொம்பவே அடிவாங்கி வருகிறது என்றும் முன்னணி நடிகர்கள் கோடிக் கணக்கில் சம்பளத்தை உயர்த்திக் கொண்டு அதிலிருந்து கீழே இறங்க மாட்டோம் என முரண்டு பிடிப்பதால் திரைத்துறையே அழிவின் உச்சிக்கு சென்றுவிட்டதாக திருப்பூர் சுப்ரமணியம் தனது மன வேதனையை கொட்டித் தீர்த்துவிட்டார்.
பாப்கார்ன், பார்க்கிங் என டிக்கெட் விலையை விட மற்றவைகளின் விலையை தியேட்டர் ஓனர்கள் ஏற்றியது தான் மக்கள் தியேட்டருக்கு வராமல் பொறுமையாக 4 வாரங்கள் கழித்து வீட்டிலேயே வெளியாகும் புதிய படத்தை குடும்பத்துடன் பார்க்க காரணம் என்பதை மட்டும் அவர் சொல்லவே மாட்டார் என நடிகர்கள் தரப்பில் இருந்து சில குரல்களும் வரத் தொடங்கியுள்ளன.

சமீபத்தில், சென்னைக்கெல்லாம் வந்து பாலகிருஷ்ணா அகண்டா 2வுக்கு அப்படி புரொமோஷன் செய்தும் அந்த படத்தை சொன்ன தேதியில் ரிலீஸ் செய்ய முடியவில்லை. இந்த மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள படங்களின் புரொமோஷன்களும் பெரிதாக இன்னமும் சூடு பிடிக்கவில்லை. இந்நிலையில், பொங்கலுக்கு பிரபாஸின் 'ராஜாசாப்' படம் வருமா? வராதா? என்கிற கேள்வி வெடித்துள்ளது.
கும்பிடு போட்ட நெட்பிளிக்ஸ்: தென்னிந்திய சினிமாவை நம்பி முன்னணி நடிகர்கள் படங்களை பல கோடிக்கு வாங்கி வெளியிட்டால் உலகளவில் ரசிகர்கள் பார்த்து கொண்டாடி விடுவார்கள், மகாராஜா படம் தந்தது போல வசூலை அள்ளி விடலாம் என நினைத்த நெட்பிளிக்ஸுக்கு விடாமுயற்சி, குட் பேட் அக்லி, தக் லைஃப், கூலி என வரிசையாக டாப் ஹீரோக்களின் படங்கள் சோலியை முடிக்க உங்க சங்காத்தமே வேண்டாம் என எஸ்கேப் ஆகிவிட்டது. ஓடிடி உரிமம் பெரிய தொகைக்கு விற்காத நிலையில், தயாரிப்பாளர்கள் பெரிய நடிகர்களுக்கு சம்பளம் கொடுக்கவோ புதிதாக படங்களை தயாரிக்கவோ தயாராக இல்லை என்கிற நிலை உருவாகி இருக்கிறது என திருப்பூர் சுப்ரமணியமே சொல்லிவிட்டார்.

அகண்டா 2வை தொடர்ந்து ராஜாசாப்?: அடுத்த ஆண்டு பொங்கலுக்கு பிரபாஸின் ராஜாசாப் திரைப்படம் திரைக்கு வரும் என்றும் ஜன நாயகன் படத்துக்கு போட்டியாக ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமம் இன்னமும் வியாபாரம் ஆகவில்லை என்றும் சொன்ன தேதியில் படம் வெளியாவது சந்தேகம் தான் என டோலிவுட்டில் பரபரப்பான பேச்சுகள் அடிபட்டு வருகின்றன. அகண்டா 2வை போல ராஜாசாப் படமும் ரிலீஸ் தள்ளிப் போகும் என்கின்றனர்.
ஜன நாயகனுக்கு ஜாக்பாட் கிடைக்குமா?: சிவகார்த்திகேயனின் பராசக்தி மற்றும் விஜய்யின் ஜன நாயகன் உள்ளிட்ட படங்கள் பொங்கலுக்கு ஒரேயடியாக போட்டிப் போட்டு வெளியாகி விட்டால், அதன் பின்னர் தமிழ் சினிமாவிலும் பெரிய படங்கள் இல்லை என்கிற நிலை உருவாகி விடும் சூழல் உள்ளது. பிரபாஸ் படம் வெளியாகவில்லை என்றால் விஜய்யின் ஜன நாயகன் படத்துக்கு ஜாக்பாட் என்கின்றனர். ஆடியோ லாஞ்ச் உள்ளிட்ட எந்தவொரு அறிகுறியும் அந்த படத்துக்கு இன்னமும் ஆரம்பிக்காத நிலையில், தள்ளிப் போகுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், ராஜாசாப் படக்குழு இன்னமும் உறுதியாக படம் பொங்கலுக்கு வருவது உறுதி என்றே கூறி வருகின்றனர். ராஜாசாப் படத்தின் புரொமோஷன் ஆரம்பித்தால்தான் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











