அந்த தப்பை மட்டும் செய்யாதீங்க.. காதல், திருமண முறிவு பற்றி பிரபுதேவா உருக்கம்.. ரொம்ப ஃபீல் பண்றாரு
சென்னை: பிரபுதேவா இந்திய அளவில் ஃபேமஸான நடன அமைப்பாளர், நடிகர், இயக்குநர் என்று பல முகங்களை கொண்டிருக்கிறார். இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்றும் அவர் புகழப்படுகிறார். அவர் புகழின் உச்சியில் இருந்தாலும் அவரை சுற்றி நிறைய சர்ச்சைகளும் எழுந்திருக்கின்றன. முக்கியமாக நடிகை நயன்தாராவுடன் அவர் இணைத்து பேசப்பட்டார். சூழல் இப்படி இருக்க தனது காதல் வாழ்க்கை, திருமண வாழ்க்கை குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று புகழப்படுபவர் பிரபுதேவா. இப்போது தமிழ் சினிமாவில் இருக்கும் ஏராளமான நடன அமைப்பாளர்கள் பிரபுதேவா மற்றும் அவரது அண்ணன் ராஜுசுந்தரம் க்ரூப்பில் ஆடியவர்கள்தான். தற்போதைய நடன அமைப்பாளர்கள் பிரபுதேவாவை தங்களது குருவாக இன்னமும் பார்த்துவருகிறார்கள். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் சென்று அவர் ஃபெர்பார்மன்ஸ் செய்து ரசிகர்களை ஈர்த்திருக்கிறார். குறிப்பாக மைக்கேல் ஜாக்சனின் நிகழ்ச்சி ஒன்றிலேயே தனது க்ரூப்புடன் நடனம் ஆடியவர் பிரபுதேவா.

நடிகர்: முதலில் தனது தந்தை சுந்தரத்தின் நடன க்ரூப்பில் டான்ஸராக இருந்த அவர்; அவ்வப்போது ஒரு பாடலுக்கு மட்டும் திரையில் தோன்றி நடனம் ஆட ஆரம்பித்தார். அதன் பிறகு நடிகராகவும் தமிழ் சினிமாவில் கோலோச்சினார். எதார்த்தமான நடிப்பு அவரது பலங்களில் ஒன்று. அவர் நடித்த காதலன், மின்சார கனவு, மிஸ்டர் ரோமியோ, டைம், பெண்ணின் மனதை தொட்டு என பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. அவரது நடிப்புக்கென்று இன்றுவரை பலரும் ரசிகர்களாக இருக்கிறார்கள்.
இயக்குநர் அவதாரம்: நடன அமைப்பாளர், நடிகர் என்பதை தாண்டி பிரபுதேவா நல்ல இயக்குநரும்கூட. தெலுங்கில் Nuvvostanante Nenoddantana என்ற படத்தில் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படத்தின் ஹிட்டுக்கு பிறகு தமிழில் போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல், வெடி உள்ளிட்ட படங்களை இயக்கினார். ஹிந்தியிலும் வாண்டட், ரவுடி ரத்தோர், ராமையா வஸ்தாவையா, தபாங் 3 உள்ளிட்ட படங்களை இயக்கினார். எனவே இந்தியா முழுவதும் தெரிந்த இயக்குநராகவும் அவர் ஜொலித்துக்க்கொண்டிருக்கிறார். இப்போது விஜய்யுடன் GOAT படத்தில் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார்.
சர்ச்சைகள்: ஒருபக்கம் அவர் புகழின் உச்சியில் இருந்தாலும் மறுபக்கம் சர்ச்சைகளையும் சந்தித்தவர் பிரபு. முதலில் ரமலத் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள். 2 மகன்களில் ஒருவர் இறந்துவிட்டார். சூழல் இப்படி இருக்க ரமலத்தை பிரிந்த பிரபுதேவா நடிகை நயன்தாராவுடன் லிவிங்கில் இருந்தார். ஆனால் அந்த ரிலேஷன்ஷிப்பும் பாதியில் முடிந்தது. பிறகு மருத்துவர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். அந்தத் தம்பதிக்கு ஒரு மகள் அண்மையில்தான் பிறந்தார்.
பிரபுதேவா பேட்டி: இந்நிலையில் பிரபுதேவா அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் பேசிய அவர், "எனது முதல் திருமணம் காதல் திருமணம்தான். அது எல்லோருக்கும் ஆச்சரியத்தைத்தான் கொடுத்தது. ஆனால் அது சரிப்பட்டு வரவில்லை. அதனால் அவரை பிரிந்துவிட்டேன். ஆனால் எனது பிள்ளைகள் மீது அளவு கடந்த பாசம் இருக்கிறது. வாழ்க்கையில் ஒரு தவறு மட்டும் யாரும் பண்ணவே கூடாது. அதாவது பிள்ளைகள் மீது அளவு கடந்த பாசத்தையும் அக்கறையையும் வைத்துவிடவே கூடாது. அது கொன்னுடும்.
தப்பு செய்யாதீங்க: அவர்களுக்கு ஒரு சின்ன விஷயம் என்றால்கூட நம்மால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அவர்களை வளர்க்க வேண்டும், பெரிய ஆள் ஆக்க வேண்டும், இந்த உலகத்தில் நிலை நிறுத்த வேண்டும் என்பதில்தான் நமது எண்ணங்கள் இருக்கும். அதனால் நமது வாழ்க்கையை ஃப்ரீயாக வாழ முடியாது. எனவே யாரும் தங்கள் பிள்ளைகள் மீது ரொம்ப பாசம் வைக்கும் தவறை மட்டும் செய்துவிடாதீர்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











