கொஞ்சம் பிளாஷ்பேக்.. டைரக்டர் சசியின் அந்த சூப்பர் ஹிட் படத்தை அவசரப்பட்டு இழந்த பிரபல ஹீரோ!
சென்னை: இயக்குனர் சசியின் அந்த சூப்பர் ஹிட் படத்தில் முதலில் நடிக்க இருந்தது அந்த ஹீரோதான்.
சினிமாவில் அவருக்கு உருவாக்கிய கதை இவருக்கும் இவருக்கு உருவாக்கிய கதை அவருக்கும் செல்வது சகஜம்.
அப்படி பல கதைகள் மாறி படமாக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு கால்ஷீட் பிரச்னை, ஏதோ ஒரு காரணத்துக்காக சில கதைகளை ஹீரோக்கள் மறுப்பது என பல காரணங்கள் இருக்கின்றன.

சரியாக கணிக்காமல்
அந்தக் காலத்தில் கதையை கேட்டதுமே இது இந்த நடிகருக்குத்தான் செட் ஆகும் என்று அடித்துச் சொல்வார்கள். இன்றைய காலகட்டத்தில், நாலு பாட்டு, நான்கு ஃபைட் கதைகள் எல்லா நடிகர்களுக்குமே பொருந்துவதாகத்தான் இருக்கிறது. ஆனால், சில சூப்பர் ஹிட் படங்களை, சரியாக கணிக்காமல் இழந்திருக்கிறார்கள் பல நடிகர்கள். அப்படி ஒரு படத்தை இழந்திருக்கிறார், பிரபுதேவா!

சொல்லாமலே
சசியின் முதல் படம், 'சொல்லாமலே'. லிவிங்ஸ்டன் ஹீரோவாக நடித்திருந்தார். கவுசல்யா நாயகி. கரண், பிரகாஷ் ராஜ், விவேக் உள்பட பலர் நடித்த படம். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படம் மெகா ஹிட்டானது. தெலுங்கில், வெங்கடேஷ், ட்விங்கிள் கண்ணா நடிப்பில் சீனு என்றும் இந்தியில் கோவிந்தா, ராணி முகர்ஜி நடிக்க, பியார் திவானா ஹோதா ஹே என்றும் ரீமேக் ஆகி ஹிட்டான படம்.

வாய்ப்பேச முடியாதவன்
தாழ்வு மனப்பான்மை கொண்ட நாயகன் வேலை தேடி சென்னை வருகிறான். சென்னையில் இருக்கும் அமெரிக்க குடியுரிமை பெற்ற ஹீரோயினைச் சந்திக்கிறான். அவனை முதன் முதலாக சந்திக்கும்போது, வாய்ப்பேச முடியாதவன் என நினைத்துப் பரிதாபப்படுகிறார் அவள். அந்த பரிதாபம் தொடர வேண்டும் என்று நினைக்கும் ஹீரோ, அவள் முன் வாய்பேச முடியாதவனாகவே நடித்து, நட்பு கொள்கிறான்.

பொய் சொல்லி
யாராவது பொய் சொன்னாலோ, ஏமாற்றினாலோ அவளால் தாங்க முடியாது. இதனால் கடைசிவரை பொய் சொல்லி காதலில் விழும் நாயகன், அவளுக்காக கடைசியில் என்ன முடிவெடுக்கிறான் என்பதுதான் படம். யாரும் எதிர்பார்க்காத அந்த ஷாக் கிளைமாக்ஸ்தான் மொத்த படமும். சசியின் சினிமா வாழ்க்கைக்குச் சுகமாகப் பிள்ளையார் சுழி போட்ட படம் இது.

நடிகர் பிரபுதேவா
இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்க இயக்குனரின் முதல் சாய்ஸ், பிரபுதேவா. இயக்குனர் சசி அவரிடம்தான் முதலில் கதை சொன்னார். அப்போது செம பிசியாக இருந்தார் பிரபுதேவா. கதையை கேட்டு பாராட்டிய பிரபுதேவா, தனக்கு இந்த கேரக்டர் செட்டாகாது என்றார் சசியிடம். 'இப்பதான் விஐபி மாதிரி ஸ்டைலிஷான படங்கள்ல நடிச்சுட்டு வர்றேன். தாழ்வு மனப்பான்மை கொண்ட ஹீரோ கேரக்டர் எனக்கு சரிபட்டு வராதுன்னு நினைக்கிறேன்' என்றாராம் பிரபுதேவா.

ரோஜா கூட்டம்
பிறகுதான் கதைக்குள் வந்திருக்கிறார், லிவிங்ஸ்டன். அவருக்காகத் திரைக்கதையில் சில மாற்றங்களை செய்திருக்கிறார்கள். இந்தப் படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து, இதன் தெலுங்கு ரீமேக்கையும் இயக்கினார் சசி. பிறகு இரண்டாவதாக, 'ரோஜா கூட்டம்' படத்தை இயக்கினார் சசி. அந்தக் கதைக்கும் அவரது முதல் சாய்ஸ், பிரபுதேவாவாகத்தான் இருந்தது. அவர் அப்போது பயங்கர பிசியாக இருந்ததால், ஶ்ரீகாந்த் அறிமுகமானார்!


Click it and Unblock the Notifications











