பிரபு தேவாவின் 100 பாடல்கள்..100 நிமிட நடனம்.. சொதப்பிய நிகழ்ச்சி!
சென்னை: டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக கலைஞராக விளங்கி வருகிறார் பிரபுதேவா. ரசிகர்கள் இவரை இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அழைத்து வருகின்றனர்.100க்கும் மேற்பட்ட படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி உள்ள இவர், பல ஹிட் திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இவரை கௌரவிக்கும் வகையில், பிரபுதேவாவின் 100 பாடல்களுக்கு 100 நிமிடம் தொடர்ந்து நடனமாடும் உலக சாதனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, கடைசி நேரத்தில் பிரபு தேவா வராததால் சொதப்பலில் முடிந்தது.
பி.எஸ் ராக்ஸ் என்கிற அமைப்பின் சார்பாக, சர்வதேச நடன தினம், நடிகர் பிரபு தேவாவிற்கு அர்ப்பணிக்கும் வகையில் நம்ம மாஸ்டர் நம்ம முன்னாடி என்கிற பெயரில், பிரபு தேவாவின் 100 பாடல்களுக்கு 100 நிமிடங்களில் நடனமாடும் நிகழ்ச்சி சென்னை ராஜரத்னம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள், நடன இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.

வெயிலில் அவதிப்பட்ட மாணவர்கள்: அதிகாலை 6 மணிக்கு தொடங்கி 7.30 மணிக்குள் முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு மாணவர்களிடம் இருந்து ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது. இதற்காக மாணவர்கள் காலை 5 மணிக்கே நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்துவிட்டார்கள். 9 மணி ஆகியும் நிகழ்ச்சிக்கு பிரபு தேவா வராததால், நிகழ்ச்சி தொடங்கப்படவில்லை, இதனால் மாணவர்கள் வெயிலில் அவதிப்பட்டனர். மேலும், மாணவர்களுக்கு காலை உணவுக்கூட தராமல் வெறும் தண்ணீர் பாட்டில் மட்டுமே கொடுக்கப்பட்டது. இதனால், ஆத்திரம் அடைந்த பெற்றோர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
உடல்நிலை சரியில்லை : இதையடுத்து, பிரபுதேவா திடீரென வீடியோவில் தோன்றி, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மிகுந்த ஆவலுடன் இருந்தேன். ஆனால், உடல் நிலை சரியில்லாத காரணமாக இதில் கலந்து கொள்ள முடியாமல் போனது என்றார். இங்கு நடனமாட வந்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றார். காலையில் இருந்து பிரபுதேவா வருவார் என்று சொல்லி விட்டு கடைசி நேரத்தில் பிரபு தேவா வராததால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் சிலர் தங்கள் குழந்தைகளை, அங்கிருந்து கோவத்துடன் அழைத்து சென்றனர்.
சொதப்பிய நிகழ்ச்சி: இதையடுத்து பேசிய ராபர்ட் மாஸ்டர், ஹைதராபாத்தில் இருந்து விமானத்தின் மூலம் இங்கு வர அரைமணி நேரம் தான் ஆகும். ஆனால், அவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால் வரமுடியவில்லை என்றார். சாரி ராபர்ட் என்று சொன்னார். நாங்களே அவருடைய வருகைக்காகத்தான் காத்திருந்தோம், அடுத்தமுறை நிச்சயம் இதே போன்று ஒரு நிகழ்ச்சி நடத்தலாம் என்று சொல்லி இருக்கிறார் என்றார். இதையடுத்து, உலகசாதனை நிகழ்ச்சியாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி பாதியில் தடைபட்டு, பிரபு தேவாவிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியாக மாற்றப்பட்டு தொடர்ந்து ஒரு மணி நேரம் நிகழ்ச்சி நடைபெற்றது.


Click it and Unblock the Notifications











