கவுண்டமணி, செந்தில் போல ஒரு காம்போ.. டிராகன் படத்தில் செம சர்ப்ரைஸ்.. இயக்குநர் பிரத்யேக பேட்டி!
சென்னை: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள படம் டிராகன். இந்தப் படம் வரும் 21ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயடு லோஹர், வி.ஜே. சித்து, ஹர்ஷத் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு தனி எதிர்பார்ப்பு உள்ளது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. லியோன் ஜேம்ஸ் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார்.இந்நிலையில் படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து நமது ஃபிலிமி பீட் சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது அவர், பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அவர் அளித்த பேட்டியில், படத்தில் எனது சொந்த அனுபவத்தைக் கொண்டு எடுத்துள்ளேன். குறிப்பாக டிரைலரில் மிஷ்கின் சார் சொன்ன வசனம், 'காலேஜ்க்கு வெளியே போனால் ஒரு நாயும் மதிக்காது' என்பதை நான் எனது சொந்த வாழ்க்கையில் அனுபவித்துள்ளேன். கல்லூரியில் நானும் கொஞ்சம் கெத்தாக சுற்றிய பையன்தான். அப்போது என்னைப் பார்த்தால் பலரும் ஜாலியாக பேசுவார்கள். ஆனால், கல்லூரியை முடித்து வெளியே வந்த பின்னர்தான் எனது உண்மையான நண்பர்கள் யார் எனத் தெரிந்து கொண்டேன்.

படத்தில் இடம்பெற்றுள்ள லவ் ஃபெயிலியர் பாடலை முதலில் சிம்பு சார் பாட மறுத்துவிட்டார். அதன் பின்னர் பாடல் வரிகளைக் கேட்ட பின்னர் அவர் பாட ஒப்புக் கொண்டார். ஏ.ஜி.எஸ் நிறுவனத்துடன் பணியாற்றுவது என்பது எனக்கு மிகவும் சௌகரியமானதாக இருந்தது. நான் சொன்ன கதையை படமாக அப்படியே எடுத்துக் கொடுத்துள்ளேன். மேலும் படத்திற்கு என்ன தேவை என தயாரிப்பாளர் அர்ச்சனாவிடம் கூறினாலும் அவர் அதனைச் செய்து கொடுப்பார். அந்த அளவிற்கு மிகவும் உறுதுணையாக இந்தப் படத்தில் அவர் இருந்தார். ஏதாவது புதிதாக நாங்கள் செய்தால், அதை அவர் பாராட்டி ஊக்குவித்தார்.

வி.ஜே. சித்து - ஹர்ஷத்: படத்தில் நடித்த அனைவரையும் நான் ஒரே மாதிரிதான் நடத்தினேன். மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற இயக்குநர்களை ஒரு மாதிரியும் படத்தில் நடித்த சாதாரண நடிகரையும் ஒரே மாதிரிதான் நடத்தினேன். அனைவருக்கும் உரிய மரியாதை கொடுத்தேன். படத்தில் வி.ஜே. சித்து மற்றும் ஹர்ஷத் நடிக்க காரணம் உள்ளது. அவர்களுக்கு இரண்டு லட்சம் பார்வையாளர்கள் இருக்கும்போது, அவர்களுக்கு நானும் ரசிகராக மாறினேன். மனரீதியாக நான் சோர்வாக இருக்கும் போது, அவர்களின் வீடியோக்களை நான் அதிகம் பார்த்துள்ளேன். அதனால் என்னவோ நான் அவர்களைத் தேடிப் பிடித்து, இந்தப் படத்தில் இருவரும் நடிக்க வேண்டும் என படத்தில் நடிக்க வைத்தேன்.
கவுண்டமணி - செந்தில்: அவர்கள் இருவரும் கவுண்டமணி - செந்தில் மாதிரி. இந்தப் படத்திற்குள் அவர்கள் இருந்தாக வேண்டும் என அவர்களை நடிக்க வைக்கவில்லை. நடிகர்களாக இந்தப் படத்தில் அவர்களை நடிக்க வைத்துள்ளேன். அவர்களின் திறமை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்கள் யூடியூப்பில் இருந்து வந்துள்ளதால், எக்ஸ்ட்ரா டயலாக் எல்லாம் பேச நினைத்தார்கள். ஆனால் அதற்கு இங்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. வி.ஜே. சித்து முதல் நாளில் வந்தார். அதனால் அவர் ஹர்ஷத்திடம் சொல்லி அனுப்பிவிட்டார். டிராகன் படத்திற்கு பின்னர் அவர்கள் இருவரும் வேறு எந்த படமும் நடிக்கவில்லை. அவர்கள் எனக்காக இந்தப் படத்தில் நடித்துக் கொடுத்தார்கள். குறிப்பாக வி.ஜே. சித்துவைக் கூறலாம்" என பேசினார். இவரது பேட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











